தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினம் கொண்டாட்டத்தில் சிங்கள இராணுவம் கடும் கெடுபிடிகள் செய்த நிகழ்வு தமிழீழ மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினப் பொதுக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை (01.05.2025) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது.
பூவன் மதீசன் குழுவினரின் எழுச்சிப் பாடல்களுடன் ஆரம்பமான இப்பொதுக்கூட்டம் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் இணைப்பாளர் நா.பார்த்தீபன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தொடக்கவுரையாற்றினார். சமூக – அரசியற் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன், தமிழ்த்தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா, சனநாயகத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் திடீரென அரங்கிற்குள் நுழைந்த அதிரடிப் படையினர், காவற்துறையினர் மோப்பநாய் சகிதம் மண்டபத்தை அங்குலம் அங்குலமாகச் சோதனையிட்டனர்.
வருகைதந்தவர்களின் கைப்பைகளும் சோதனையிடப்பட்டதில் அச்சம் காரணமாகப் பலர் மண்டபத்தினுள் நுழையாமலேயே திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
எனினும், அரங்கு நிறைந்த மக்கள் பங்கேற்புடன் இம் மேதினப் பொதுக்கூட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.