காஷ்மீர் தாக்குதலுக்கு வலதுசாரி அரசியலே காரணம் – துரை வைகோ அதிரடி

மதுரை முனிச்சாலையில் நேற்று மதிமுக மதுரை மண்டலம் சார்பில் ஒன்றிய அரசின் வக்பு திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது….

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். குழந்தைகள் முன்பு பெற்றோர்களையும், மனைவி முன்பு கணவனையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இதுபோன்ற இழி செயலை, பாவச் செயலை எந்த மதமும் ஆதரிப்பதில்லை.

இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களும் இச்சம்பவத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், இங்குள்ள மதவாத சக்திகள் இதை அரசியலாக்கப் பார்க்கின்றனர். இதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் துணை பிரதமர் பல விளக்கங்களைச் சொல்லிவிட்டு காஷ்மீர் விடுதலைப் போராட்ட வீரர்கள்தான் காரணம் என அபாண்டமான விஷமத்தனமான கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்கிறேன்… விடுதலைப் போராட்ட வீரர்கள் தம் உயிரைத் துச்சமென மதித்து எதற்கும் துணிந்தவர்கள். ஒருபோதும் இதுபோன்ற இழிவான செயல்களைச் செய்யமாட்டார்கள். அவர்கள் இராணுவம், காவல்துறை, அரசியல் சக்திகள், அரசியல்வாதிகள் மீது எதிர்த்து தாக்குதல் நடத்துவார்கள். ஒருபோதும் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள். இதில் இங்குள்ள இஸ்லாமிய சக்திகளுக்கு தொடர்பில்லை. ஆனால், மதவாத சக்திகள் வேறு மாதிரி கொண்டு போய் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.

இங்கு இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மாற்று மதத்தினர் மீது வன்மம் கிடையாது. இச்சம்பவத்தை பிரித்தாளும் சூழ்ச்சி செய்து வாக்கு வங்கியாக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்… இதை வைத்து அரசியல் செய்யக் கூடாது. இதுபோன்ற தீவிரவாத எண்ணங்கள் எங்கிருந்து வருகிறது. இந்த எண்ணங்களை யார் விதைக்கிறார்கள்? அதைத்தான் நான் அரசியலுக்கு வருவதற்கு 7 ஆண்டுக்கு முன்பே வலதுசாரி அரசியல் தலைதூக்கி வருகிறது எனச் சொன்னேன்.

வலதுசாரி அரசியல் என்பது சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி அவர்களை மோத விட்டு அதன் மூலம் வாக்கு வங்கியைப் பெறுவதுதான் வலது சாரி அரசியல் என்றேன். வலதுசாரி அரசியலை நான் என்றைக்கும் எதிர்ப்பேன். இந்தியாவில் உத்தரப் பிரதேசத்திலும், இராஜஸ்தானிலும் இஸ்லாமியர்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் என அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது வலதுசாரி அரசியல். இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவது சிங்கள இனவாத வலதுசாரி அரசியல்.

தமிழ்நாட்டிலும் சாதி, மதத்தின் பெயரால் கொலைகள் நடப்பதும் சாதி மத வலதுசாரி அரசியல். பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மீதும், தலைவர்கள் மீதும் விமர்சனம் செய்யுங்கள். ஆனால் ஒருபோதும் மதம், சாதி அடிப்படையில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. அத்தகைய வலதுசாரி அரசியல் தமிழ்நாட்டைவிட்டுப் போக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சாதி, மதங்களின் அடிப்படையில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என என்பது அன்பான வேண்டுகோள்.

பஹல்காம் சம்பவத்துக்கு வலதுசாரி அரசியல்வாதிகள்தான் காரணம். இச்சம்பவம் மனிதநேயத்துக்கு, இஸ்லாத்துக்கு எதிரானது. தமிழ்நாட்டு மக்கள் சாதி அரசியல், மத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியாவில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்று ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இதற்கு ஒன்றிய அரசிடம் போதிய பதில் இல்லை.

நூறு நாள் வேலைத் திட்டத்துக்குரிய நிதியை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசு இதுபோன்ற செயல்பாடுகளிலிருந்து மக்களை திசை திருப்பவும், மடைமாற்றவும் வக்பு திருத்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது சட்டத்துக்கு ஜனநாயக மாண்புக்கு, இஸ்லாமிய நலன்களுக்கு எதிரானது. இதனை மதிமுக முழு மனதுடன் எதிர்க்கிறது.

ஏழை எளியோருக்குத் தொண்டு செய்வது இறைவனுக்குச் செய்யும் கடமை என அரபுமொழியில் குரானில் 57, 58 வசனத்தில் அல்லா சொல்கிறார். அதனை நடைமுறைப்படுத்தவும், கடமைகளை ஆற்றத்தான் வக்பு சொத்துகள் கொண்டுவரப்பட்டன. அதன் மூலம் தர்காக்கள், மதரசாக்கள், பள்ளிவாசல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பயனடையும் பயனாளிகள் இஸ்லாமியர்கள் மட்டுமல்ல. வக்பு சொத்துகள் மூலம் இஸ்லாமியர்கள் மட்டும் பயனடையவில்லை, இந்துக்கள், கிறிஸ்தவர்கள் பலர் கல்வி நிறுவனங்கள் நடத்தகின்றனர். அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் பயன்பாட்டு நிலங்களாக உள்ளன.

பல சமூகத்தினர் இஸ்லாமிய ஆன்மிகப் பணிகளுக்காக வக்பு சமூகத்துக்கு நிலங்களைத் தானம் கொடுத்துள்ளனர், இதன் மூலம் பன்முகத் தன்மையையும், ஒற்றுமையையும் காட்டுகிறது. திருத்தச் சட்டமானது இத்தகைய ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும் கெடுக்கிறது. வக்பு வாரியத்தின் தடையில்லாச் சான்று வழங்கும் உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது பெரிய தவறாகும்.

மேலும் வக்பு வாரியத்திற்கு தானம் கொடுப்பவர்கள் 5 ஆண்டாவது இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் எனச் சொல்வது பெரும் அபத்தமானது. மேலும் நிர்வாகத்தில் இஸ்லாமியர் தவிர மாற்று மதத்தினர் 2 பேர் உறுப்பினராக இருக்க வேண்டும் என திருத்தியுள்ளனர். திருப்பதி கோயில் நிர்வாகத்தில் கிறிஸ்தவர்களை நியமிப்பது எவ்வளவு பெரிய தவறோ அதைப் போன்றதுதான் இதுவும்.

இஸ்லாமியர்களின் சொத்துகளை, இறை சொத்துகளை அவர்கள் தான் நிர்வகிக்க வேண்டும் என்பது தான் நீதி. அவர்களுக்குத்தான் நோக்கம் புரியும். நாட்டின் விடுதலைக்காக இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் கோடிக்கணக்கான சொத்துகளை வாரி வழங்கியுள்ளனர். இந்த நாட்டின் காவலர்களாக உள்ள இஸ்லாமியர்களை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

வைகோ 60 ஆண்டுகாலம் மத நல்லிணக்கத்துக்குப் பாடுபட்டு மதவெறி அரசியல் தமிழ்நாட்டுக்கு வந்துவிடக்கூடாது எனப் பாடுபட்டு வருகிறார். அவரது வழியில் நாமும் மதநல்லிணக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும். எனவே இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் ஒன்றியஅரசின் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும். இதற்காக மக்கள் மன்றத்தில் நீதி மன்றத்தில் மதிமுக தொடர்ந்து போராடும். மத, சாதி அரசியல், வன்மம் ஒழியட்டும், ஒழிக்கப்பட வேண்டும். மனிதநேயம் பரவட்டும், சகோதரத்துவம் வளரட்டும்

இவ்வாறு துரை வைகோ பேசினார்.

Leave a Response