தமிழ்நாட்டில் நீட் தேர்வு முறையை இரத்து செய்தால் தான் நாங்கள் பாஜக கூட்டணியில் இருப்போம்; இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுவோம் என்று சொல்வதற்கு அதிமுகவுக்கு தகுதி இருக்கிறதா? என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுத்தார்.
சட்டப்பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
அப்போது நடந்த விவாத விவரம்….
எடப்பாடி பழனிச்சாமி: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் உயர் தர சிகிச்சை அளிக்க முடியும். அறுவை சிகிச்சையும் செய்ய முடியும். கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக உறுப்பு மாற்று சிகிச்சைக்கான தேசிய விருது பெற்றுள்ளோம்.
அமைச்சர் சிவசங்கர்: தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மூலம் நீங்கள் (அதிமுக) செய்த துரோகத்திற்கு தான் இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை ஒன்றிய அரசு அளித்தது. ஒரு படத்தில் வடிவேலு காமெடி போல, கணபதி ஐயர் பேக்கரி டீலிங் போல. நீட் தேர்வை நீங்க நடத்திக்கோங்க. அதற்குப் பதிலாக 11 மருத்துவக் கல்லூரிகள் தந்திடுங்க என்று டீலிங் போட்டிருக்காங்க.
எடப்பாடி பழனிசாமி: நீட் கொண்டு வந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியின்போதுதான். அதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தது அதிமுக. நீட் தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவரின் மனைவிதான் வாதாடினார். நீட் தேர்வு வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தது அவர்தான்.
அமைச்சர் சிவசங்கர்: தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு அனுமதி அளித்தது அதிமுக ஆட்சியில்தான். கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருக்கும்போது தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. எடப்பாடி முதல்வராக இருந்தபோதுதான் தமிழகத்தில் நீட் வந்தது.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதும், திமுக ஆட்சியில் இருக்கும்போதும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் நீட் தேர்வு தமிழகத்திற்கு வரவில்லை. யார் இருக்கும்போது நீட் தமிழகத்திற்குள் வந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சித் தலைவர், நீட் தேர்வு முறையை யார் கொண்டு வந்தது? யார் கொண்டு வந்தது? கொண்டு வந்த காரணத்தினால் தான் இவ்வளவு சிக்கல் என்று சொல்லியிருக்கிறார். அந்தச் சிக்கலைச் சரிசெய்வதற்கு ஒரு சரியான வாய்ப்பு உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. நாங்கள் செய்தது தவறோ, தவறில்லையோ – நான் அந்த விவாதத்திற்கு வரவில்லை. “இப்போது இருக்கக்கூடிய நீட் தேர்வு முறையை இரத்து செய்தால் தான் நாங்கள் கூட்டணியில் இருப்போம்; இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுவோம்” என்று சொல்வதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறதா? இதுதான் என் கேள்வி.
எடப்பாடி பழனிச்சாமி: உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் நாங்கள் எப்படி தலையிட முடியும்?
மு.க.ஸ்டாலின்: ஒன்றிய அரசு அதைக் கொண்டு வருவதற்கு எல்லாவித அதிகாரமும் இருக்கிறது. அந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசிற்கு எல்லா வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், அது தேவையில்லை என்று வலியுறுத்துவதற்கு நீங்கள் தயாரா? அதுதான் என்னுடைய கேள்வி.
எடப்பாடி: உச்சநீதிமனறத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்றம்தான் சரி செய்ய வேண்டும்.
சிவசங்கர்: உச்ச நீதிமன்றம்தான் சரி செய்ய வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் தமிழகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினீர்கள்?
எடப்பாடி: 2019 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு இரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள்?
மு.க.ஸ்டாலின்: வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். அதற்கு நாங்கள் எந்த விதமான மறுப்பும் சொல்லவில்லை. ஆனால் ஒன்றியத்தில் எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயமாக வாக்குறுதியை நிறைவேற்றி இருப்போம். இப்போது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே, இந்த நிபந்தனையைப் போட்டு, அந்தக் கூட்டணியைத் தொடர்வீர்களா? என்பதுதான் என் கேள்வி.
எடப்பாடி: 1999 ஆம் ஆண்டு பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது. அதனால் அதிமுகவும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தப்பில்லை.
மு.க.ஸ்டாலின்: நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு “பா.ஜ.க. கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். 2026 மட்டுமல்ல 2031-லும் அந்த கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம்” என்று நீங்கள் கூறிவிட்டு, இப்போது கூட்டணியில் சேர்ந்திருக்கிறீர்களே; யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம்.
இவ்வாறு அந்த விவாதம் நடைபெற்றது.