தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் சென்னை புத்தகக் காட்சி நடத்தப்படும். அந்த வகையில் 48 ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று தொடங்கியது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் முன்னிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்து அரங்குகளைப் பார்வையிட்டார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுவதால் தொடக்கவிழா எளிய முறையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் பாமஉ, சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், சிவிஎம்பி எழிலரசன், ஏஎம்வி பிரபாகர் ராஜா, துணைமேயர் மகேஷ்குமார், பொது நூலகத் துறை இயக்குநர் பொ.சங்கர், பபாசி துணைத்தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் எஸ்.கே.முருகன், பொருளாளர் டபிள்யூ.ஜெ.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புத்தகக் காட்சியில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அனைத்து அரங்குகளிலும் புத்தகங்களுக்கு 10 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் தள்ளுபடி உண்டு. விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வேலைநாட்களில் பிற்பகல் 2 முதல் இரவு 8.30 மணி வரையும் புத்தகக் காட்சியை பார்வையிடலாம்.
நுழைவுக் கட்டணம் ரூ.10. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம். புத்தகக் காட்சியையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சனவரி 7 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு ஓவியப் போட்டியும், 8 ஆம் தேதி காலை 8 மணிக்கு பேச்சுப் போட்டியும் நடத்தப்படுகிறது. சனவரி12 ஆம் தேதி நடைபெறும் நிறைவுநாள் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்துகொள்கிறார்.
புத்தகக் கண்காட்சி அரங்கம் அருகே மத்திய ஊரக வளர்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையையும் (சரஸ் மேளா) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநர் திவ்யதர்ஷிணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களின் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் தயாரிப்புகள் (வீட்டு உபயோக பொருட்கள்) இடம்பெற்றுள்ளன.சனவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்.
புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தது குறித்து துணைமுதலமைச்சர் உதயநிதி கூறியிருப்பதாவது….
வாசிப்பை நேசிப்போருக்கான அறிவுத்திருவிழா, சென்னைப் புத்தகக் காட்சி!
48-ஆவது சென்னைப் புத்தகக்காட்சி 2025-ஐ நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் இன்று தொடங்கி வைத்தோம்.
அரங்கு எண் : 390-ல் திமுக இளைஞரணியின் ‘முத்தமிழறிஞர் பதிப்பகம்’ சார்பிலான புத்தகங்கள்,
அரங்கு எண் : 392-ல் அமைந்துள்ள தி.மு.கழகத்தின் ‘கலைஞர் கருவூலம்’ சார்பிலான வெளியீடுகளை பார்வையிட்டோம்.
மேலும், வெவ்வேறு பதிப்பகங்களின் அரங்குகளுக்கும் சென்று அங்குள்ள புத்தகங்களின் விவரங்களைக் கேட்டறிந்தோம்.
இப்புத்தகக்காட்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துக்கு (#BAPASI) பாராட்டுகள்.
நந்தனத்தில் இந்த அறிவு வனம் இன்று தொடங்கி ஜனவரி 12 வரை திறந்திருக்கும். அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அன்பும், வாழ்த்தும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.