சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது….
ஒரே நாடு ஒரே தேர்வு என்ற எண்ணமே தவறானது. ஒரே நாடுதான் இல்லை என்று சொல்லவில்லை. ஒரு நாட்டுக்குள் பல மாநிலங்கள், பல மொழிகள், பல கலாச்சாரம் உள்ளன.
மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடக்கூடாது. அதனைப் பறிக்கும் முயற்சியில் இறங்கக்கூடாது. நீட், கியூட் எல்லாத் தேர்வையும் இணைத்து ஒரே தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? மாநில உயர்கல்வி அமைச்சர் எதற்கு?
ஒன்றிய அரசே மத்திய பல்கலைக்கழகங்களை நிறுவுவது போன்று எல்லாக் கல்லூரிகளையும் நிறுவும் என்று அறிவிக்கலாமே.
இதன் விளைவு ஒரே நாடு, ஒரே கல்வி என ஆரம்பித்து ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதில் போய் நிற்கும்.
இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
5ஜி ஏலத்தைப் பொறுத்தவரை 5 இலட்சம் கோடிக்கு ஏலம் போக வேண்டியது, ரூ.1.5 இலட்சம் கோடிக்குத்தான் போய் உள்ளது. இதில் யாருக்கு இலாபம் என்பதை யோசிக்க வேண்டும்.
பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என ஒருபுறம் கூறுகிறார்கள். மறுபுறம் பிளாஸ்டிக் தேசியக்கொடியை பயன்படுத்துவது வியப்பாக உள்ளது. வேலை வாய்ப்பு குறித்த புள்ளி விவரங்கள் தவறாகக் காட்டப்படுகின்றன. மிக மிகக் கொடுமையான அளவில் வேலைவாய்ப்பின்மை உள்ளது.
பீகார் ஆட்சி மாற்றத்தால் மகிழ்ச்சி அடையவோ, வருத்தம் அடையவோ தேவையில்லை.பா.ஜ.க. இதுவரை பல மாநிலங்களில் என்ன செய்ததோ அது எதிர்வினையாகி அவர்களையே வந்து அடைந்துள்ளது.
நிதிப்பற்றாக்குறை, நடப்புக்கணக்குப் பற்றாக்குறை, கடன்சுமை, பணவீக்கம் இவைதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கின்றன. இதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. அதன்காரணமாகவே விலைவாசி உயர்வு, மோசமான வளர்ச்சி விகிதம், பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.
60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்று பா.ஜ.க.வினர் கேட்கின்றனர். அவர்கள் தற்போது விற்று வரும் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலே காங்கிரஸ் செய்த சாதனைகளுக்கு சாட்சியாகும். பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு அழிக்க முடியுமே தவிர, ஆக்க முடியாது என்பதை அவர்களின் செயல்களே நிரூபித்து வருகின்றன.
பணவீக்கம் 7 சதவீதம் என புள்ளியியல் துறை கூறுகிறது. ஆனால் உண்மை நிலை வேறானதாகும். கிராமங்களில் பண வீக்கம் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளது.
கீர்த்தி துபே என்ற 8 வயது சிறுமி பென்சில் கூட வாங்க இயலாத நிலையில் உள்ளதாக பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இச்சிறுமியின் மனவலியைக் கூட பா.ஜனதா ஆட்சியாளர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுவே இந்தியாவின் இன்றைய நிலை. சாதாரண மக்களின் உணவின் அளவும், தரமும் குறைந்து வருகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள் வளர்ச்சி குன்றி வருகின்றனர். இதனை பா.ஜ.க. ஆட்சியாளர்களால் அறியவும், புரியவும் முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.