
அரசு கேபிள் ஒளிபரப்பில் மாலைமுரசு தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்பட்டதற்காக தமிழக அரசுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் தேர்தல் தொடர்பான செய்திகள் , கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் ( 25-03-2021 ) மாலைமுரசு தொலைக்காட்சியில் தென் மாவட்டங்களுக்கான கருத்துக்கணிப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் தென்மாவட்டங்களில் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 17 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்றும் கருத்துக்கணிப்பு வெளியானது.
இந்தக் கருத்துக்கணிப்பு ஒளிபரப்பானதில் இருந்து அரசு கேபிள் ஒளிபரப்பில் *மாலைமுரசு தொலைக்காட்சியின் ஒளி மற்றும் ஒலியின் தரத்தைக் குறைத்து இருட்டடிப்பு செய்யும் வேலையை தமிழக அரசின் அரசு கேபிள் நிறுவனம் செய்து வருகிறது. இந்த கருத்து சுதந்திரத்திற்கு, ஊடக சுதந்திரத்திற்கு மிரட்டல் விடுக்கும் சட்டவிரோத ஜனநாயக விரோதச் செயலின் பின்னணியில் செய்தித் துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இதுபோன்ற சட்டவிரோத அத்துமீறல்களில் ஈடுபட்டு ஊடகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.* இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாய்மூடி மவுனமாக வேடிக்கை பார்க்காமல் மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகம் இது தொடர்பாக அளித்துள்ள புகாரின் மீது நடவடிக்கை எடுத்து *உடனடியாக அரசு கேபிளில் முழு தரத்துடன் மாலைமுரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்திட வேண்டும் என்றும், ஊடகக் குரலை நெரிக்க முனைந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது*. இதுவே மக்களுக்கும், ஊடகத் துறையினருக்கும் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
26-03-2021
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
