மரத்தடி சாதிப் பஞ்சாயத்து போல் உச்சநீதிமன்ற நீதிபதி பேசுவதா? – மகளிர் ஆயம் கடும் கண்டனம்

வல்லுறவுக் கொண்ட சிறுமியையே “திருமணம் செய்து கொள்கிறாயா?” எனக் கேட்கும் தலைமை நீதிபதிக்கு
மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் அருணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

”கொன்றால் பாவம் தின்றால் போச்சு” என்பது போல் ஒரு சிறுமியை வல்லுறவு கொண்ட ஆண், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொண்டால் குற்றம் நீங்கியது என்று உச்ச நீதிமன்றமே கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மோகித் சுபாஷ் சவான் என்ற மராட்டிய மாநில மின்சார வாரியத் தொழிலாளி மீதான போக்சோ சட்ட வழக்கில்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே இவ்வாறு கூறியிருக்கிறார்.

சவான் என்ற அந்த நபருக்கு இப்போது வயது 23. அவர் தனது 18 ஆவது வயதில் 16 வயதுடைய சிறுமி ஒருவரை வீடு புகுந்து முகத்தில் அமிலம் வீசிவிடுவேன் என்று அச்சுறுத்தி வல்லுறவு கொண்டிருக்கிறார். இதே போன்று பல்வேறு மிரட்டல்களை விடுத்து பலமுறை 2015 ஆம் ஆண்டு அந்தச் சிறுமியை வல்லுறவு கொண்டிருக்கிறார்.

அக்கம் பக்கத்தில் அந்தப் பெண்ணின் குடும்பத்திற்குத் தெரிந்தபிறகு, அந்தக் குற்றவாளியின் குடும்பத்தோடு பேசி தீர்வுகாண முயன்றிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த சிறுமி, தற்கொலை செய்ய முயன்று இருக்கிறாள்.

இச்சூழலில் குற்றவாளியின் பெற்றோர், இந்தப் பெண் 18 வயது அடைந்ததும், தங்களுடைய பையனுக்கே திருமணம் செய்து வைப்பதாய் ஒத்துக் கொண்டு கையொப்பமிட்டு அளித்திருக்கிறார்கள்.
மானத்திற்குப் பயந்த அந்த சிறுமியின் பெற்றோர், இந்த நிபந்தனையை ஏற்று அமைதியாகிவிட்டனர்.

இந்நிலையில் மின்சார வாரியத்தில் வேலைக்குச் சேர்ந்த அந்த நபர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது பெற்றோரும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். அதன் மீது முன்பிணை வாங்க முயன்றார் சவான். அதனை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து சவான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

பிணை கோரும் மேல்முறையீடு வழக்கு தன்னிடம் வந்த போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “நீ அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தயாரா? திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொண்டால், முன்பிணை வழங்குவது பற்றிச் சிந்திக்கலாம்” என்று கூறினார்.

குற்றம்சாட்டப்பட்ட சவான், தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதாகவும் இனி இப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

அதற்குப் பிறகும் குற்றம் சாட்டப்பட்ட சவான், “நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்வதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில்” அவர் இன்னும் நான்கு வாரங்களுக்குக் கைது செய்யப்படக் கூடாது என இடைக்காலத் தடை பிறப்பித்தார். அதற்குப்பிறகு அவர் பிணை கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்று தீர்ப்பளித்தார்.

தலைமை நீதிபதி பாப்டேயின் இந்த அணுகுமுறை, அப்பட்டமான சட்ட மீறல் மட்டுமின்றி பச்சையான ஆணாதிக்கச் சிந்தனையாகும்!

பாலியல் வல்லுறவு கொள்ளப்பட்ட பெண், நிலவும் சமூகச்சூழலில் வேறு வழியின்றி குற்றம் செய்தவரையே திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்கப்படுவது பெண் அடிமைத்தனத்தின் விளைவு!

தன் விருப்பப்படி கணவரைத் தேர்வு செய்ய முடியாதவாறு அவரோ, அவருக்குப் பொருத்தமான வேறு ஒருவரை முடிவு செய்ய முடியாத வகையில் அவர் குடும்பமோ, சிக்கவைக்கப்படுவதே கொடுமையானது.

இது குறித்துக் கொஞ்சமும் சிந்திக்காமல் மரத்தடி சாதி பஞ்சாயத்து போல உச்ச நீதிமன்ற நீதிபதி பேசுவது அருவறுப்பானது.

தனக்கு முன்னால் வந்திருக்கிற வழக்கு, அந்தப் பெண் தன்னை இவர் பலாத்காரம் செய்துவிட்டார், அவரைக் கைது செய்து தண்டனை வழங்குங்கள் என்பதுதான். அதன் மீது கவனம் செலுத்துவதற்கு மாறாக, மின்சார வாரியத்தில் பணியில் இருக்கிற குற்றவாளி சவான், வேலை இழந்துவிடக் கூடாது என்பதில்தான் நீதிபதியின் அக்கறை இருக்கிறது. அதை வெளிப்படையாக திறந்த நீதிமன்றத்திலேயே அவர் கூறுகிறார்.

அதைவிட அந்த சவான் தான் ஏற்கெனவே மணமானவன் – இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொன்ன பிறகும், அவரைக் கைது செய்ய 4 வார தடை விதிப்பதன் நோக்கம் என்ன? ஏற்கெனவே திருமணமானவர் அந்த உறவுநிலை தொடரும் போதே இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்வதைச் சட்டம் ஏற்கிறதா? ஏற்பதாக நீதிபதி கருதுகிறாரா?

ஒருவேளை ஏற்கெனவே திருமணம் செய்து கொண்ட பெண்ணை மணமுறிவு (விவாகரத்து) செய்துவிட்டு இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு, தலைமை நீதிபதி கூறுகிறாரா? அல்லது ”திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடு, கைதாவதில் இருந்தும் வேலை இழப்பில் இருந்தும் நீ தப்பித்துக் கொள்ளலாம்” என்று குற்றவாளிக்கு வழி காட்டுகிறாரா?

ஒருவேளை இக்கட்டிலிருந்து தப்பிப்பதற்காக அந்த சவான் இந்தப் பெண்ணை ஒப்புக்குத் திருமணம் செய்து கொண்டாலும், நாளைக்கு மணமுறிவு செய்யமாட்டார் என்பது என்ன நிச்சயம்?

தலைமை நீதிபதி பாப்டேயின் இந்தத் தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான இந்த அநீதி தொடர்வதற்கு ஊக்கம் அளிக்கிறது.

பாலியல் வல்லுறவு வழக்குகள் பலவற்றில் காவல் துறையினர், பெண்களுக்கு எதிராகவே நடந்து வருவதைப் பார்க்கிறோம். தலைமை நீதிபதியின் இந்தத் தீர்ப்பு காவல்துறையின் பெண் பகைப் போக்கை அதிகப்படுத்தும் ஆபத்து உள்ளது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே அளித்துள்ள தீர்ப்பை மகளிர் ஆயம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தீர்ப்பை திரும்பப் பெறுமாறும், இந்த மோசமான ஆணாதிக்கச் சிந்தனை தொடராமல் பார்த்துக் கொள்ளுமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response