மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 14 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
நேற்று முன்தினம் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடந்த நிலையில், இரவு 8 மணிக்கு விவசாய சங்கங்களின் 13 பிரதிநிதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்துப் பேசினார். 3 மணி நேரம் நடந்த இப்பேச்சுவார்த்தையில்,விவசாயிகளின் கோரிக்கைகளைச் செவி மடுக்காமல் அவர்களைச் சமரசம் செய்யும் முயற்சியில் அவர் இறங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதனால், 3 சட்டங்களையும் இரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் கடும் உறுதியுடன் உள்ளனர்.
இதனால், அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதோடு, மத்திய அரசு ஒவ்வொரு முறையும் சட்டத் திருத்தத்ததைப் பற்றி மட்டுமே பேசி வருவதால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், மத்திய வேளாண் அமைச்சருடன் இன்று நடப்பதாக இருந்த 6 ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தனர்.
இந்நிலையில், சட்டத்தில் பாதகமாக விவசாயிகள் கருதும் அனைத்தையும் நிவர்த்தி செய்து, அதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ முன்மொழிவு விவசாயிகளிடம் நேற்று தரப்பட்டது.
இது குறித்து ஆலோசித்த போராட்டக் களத்தில் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகள், மத்திய அரசின் இந்த சமரசத் திட்டத்தை நிராகரித்தனர். மேலும், தங்கள் போராட்டத்தைச் செயலிழக்கச் செய்ய மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகக் கண்டனம் தெரிவித்து, போராட்டத்தைத் தீவிரப்படுத்த இருப்பதாக அறிவித்தனர்.
இது குறித்து விவசாயிகளின் தலைவர் சிவ் குமார் காக்க செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘மத்திய அரசின் இன்றைய பரிந்துரையை முழுமையாக நிராகரிக்கிறோம். இனி எங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். வரும் 12 ஆம் தேதியோ அதற்கு முன்பாகவோ ஜெய்ப்பூர்-டெல்லி மற்றும் டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலைகளை முடக்குவோம். டெல்லிக்குள் நுழையும் அனைத்துச் சாலைகளையும் படிப்படியாக முடக்குவோம்’,’ என்றார்.
மற்றொரு விவசாய சங்க பிரதிநிதிகள் தலைவர் தர்ஷன் பால் கூறுகையில், ‘‘அமித்ஷா ஆலோசனையில் கூறிய விஷயங்களையே இன்று எழுத்துப்பூர்வமாக தந்துள்ளனர். சட்டத் திருத்தம் செய்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டோம். 3 சட்டங்களும் இரத்து செய்யப்பட வேண்டும். அதைத் தவிர்த்து வேறெந்த ஆலோசனையும் இல்லை. இனி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை. வரும் 14 ஆம் தேதி அனைத்து மாவட்ட முக்கிய நகரங்களிலும் போராட்டம் நடைபெறும். தேசிய அளவிலான இப்போராட்டத்தைத் தொடர்ந்து டெல்லிக்குச் செல்லும் சாலைகள் முடக்கப்படும்,’’ என்றார்.
மேலும், மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் கண்டிக்கும் வகையில், அதானி, அம்பானி நிறுவனப் பொருட்களை புறக்கணிக்கப் போவதாகவும், இனிவரும் நாட்களில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தப் போவதில்லை எனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
பாசக தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அம்பானி, அதானி நிறுவனங்களை நோக்கிப் போராட்டக் களம் திரும்பியிருக்கிறது. இது பாசகவின் அடிமடியில் கைவைக்கும் வேலை என்பதால் மோடி அரசு அதிர்ச்சி அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.