13 ஆவது ஐ.பி.எல்.மட்டைப்பந்துப் போட்டித் தொடரில் நேற்றிரவு சார்ஜாவில் நடந்த 56 ஆவது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சுடன் மோதியது.
மும்பை அணியில் மூன்று மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, டிரென்ட் பவுல்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தவால்குல்கர்னி, பேட்டின்சன் இடம் பிடித்தனர். இதே போல் ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு காயத்தில் இருந்து குணடைந்த அணித்தலைவர் ரோகித் சர்மா திரும்பினார்.
‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணித்தலைவர் வார்னர் தயக்கமின்றி முதலில் மும்பையை பேட் செய்ய அழைத்தார். இதன்படி மந்தமான இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை. தொடக்க வீரர் ரோகித் சர்மா (4 ரன், 7 பந்து), வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மாவின் பந்து வீச்சில் வார்னரிடம் பிடிபட்டார்.
சந்தீப் ஷர்மாவின் இன்னொரு ஓவரில் பவுண்டரி, 2 சிக்சர் தொடர்ச்சியாக விரட்டிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் (25 ரன், 13 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்த பந்தில் போல்டு ஆனார். அதாவது ஆப்-சைடில் புல்டாசாக விழுந்த பந்து அவரது பேட்டில் பட்டு ஸ்டம்பை தாக்கியது.
இதன் பின்னர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய சூர்யகுமார் யாதவ் 36 ரன்னிலும் (29 பந்து, 5 பவுண்டரி), இஷான் கிஷன் 33 ரன்னிலும் (30 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறியதும் மும்பை தடுமாற்றத்திற்கு உள்ளானது. இதற்கிடையே குருணல் பாண்ட்யா (0), சவுரப் திவாரி (1 ரன்) சுழல் வலையில் சிக்க, மும்பையின் ரன்ரேட் மோசமானது.
இந்த சூழலில் பொல்லார்ட் மும்பை அணியை மீட்டெடுத்தார். டி.நடராஜனின் பந்து வீச்சில் ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். அதிரடி காட்டி அணி சவாலான நிலையை எட்டுவதற்கு உதவிய பொல்லார்ட் 41 ரன்களில் (25 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) போல்டு ஆனார்.
20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுக்கு 149 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஐதராபாத் தரப்பில் சந்தீப் ஷர்மா 3 விக்கெட்டுகளும், ஜாசன் ஹோல்டர், ஷபாஸ் நதீம் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 150 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அணித்தலைவர் டேவிட் வார்னரும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் இறங்கினர். நேர்த்தியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய இவர்கள் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைகொண்டு விளையாடி அமர்க்களப்படுத்தினர். இந்த ஜோடியை கடைசி வரை மும்பை பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. ஐதராபாத் அணி 17.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 151 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றியை சுவைத்தது. கேப்டன் வார்னர் 85 ரன்களுடனும் (58 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்), விருத்திமான் சஹா 58 ரன்களுடனும் (45 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
7 ஆவது வெற்றியைப் பெற்ற ஐதராபாத் அணி 4 ஆவது அணியாக அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறியது. ஏற்கனவே மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகளும் பிளே-ஆப் சுற்றை எட்டி விட்டன. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் தோற்றால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த கொல்கத்தா நைட் ரைடர்சின் கனவு சிதைந்தது.
லீக் சுற்று நிறைவடைந்து விட்ட நிலையில் போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (வியாழக்கிழமை) துபாயில் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல்-2 இடங்களைப் பிடித்த மும்பை- டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நாளை மறுதினம் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் 3 மற்றும் 4-வது இடங்களைப் பெற்ற ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
நேற்றைய கடைசிநாளில் வெற்றி பெற்று நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருந்து தப்பி அடுத்த சுற்றுக்கு முன்னேறியதால் ஐதராபாத் அணி வீரர்களும் ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.