மாநிலங்களவை வாக்கெடுப்பில் மோசடி – அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகள்

விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய இரு மசோதாக்களும் நேற்று மாநிலங்களவையில் குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டன.

இது தொடர்பான வாக்கெடுப்பு முறையாக நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.அதோடு,
சபையை ஒத்திவைக்க வேண்டும் என்று தாங்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டு மசோதாக்கள் நிறைவேற வழிவகுத்ததாகக் கூறி மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரசு, திரிணாமுல் காங்கிரசு, சமாஜ்வாடி, தி.மு.க., தெலுங்கானா ராஷ்டிர சமிதி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரசு, ராஷ்டிரீய ஜனதாதளம், தேசிய மாநாடு, ஆம் ஆத்மி உள்ளிட்ட 12 கட்சிகள் நோட்டீஸ் கொடுத்து உள்ளன.

இந்த தகவலைத் தெரிவித்த காங்கிரசு மூத்த தலைவர் அகமது பட்டேல், 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது சனநாயகப் படுகொலை என்றும், சபையை ஒத்திவைக்க வேண்டும் என்றும், டிவிஷன் வாரியாக ஓட்டெடுப்பு நடத்தவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மாநிலங்களவை துணைத்தலைவர் நிராகரித்ததாகவும், எனவே அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர நோட்டீசு கொடுத்து இருப்பதாகவும் கூறினார்.

மாநிலங்களவையில் போதிய ஆதரவு இல்லை என்று தெரிந்ததால்தான் டிவிஷன் வாரியாக ஓட்டெடுப்பு நடத்த அரசு அனுமதிக்கவில்லை என்றும், இது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் துயரமான நாள் என்றும் திரிணாமுல் காங்கிரசு உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் தெரிவித்தார்.

Leave a Response