கொரொனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தனித்திரு விழித்திரு,விலகி இரு என்று அனைவரும் சொன்னார்கள். ஆனால் ஏழையோடு இருங்கள் என்று கடந்த 40 நாட்களாக ஏழை எளிய மக்களுக்கு தினமும் ஒரு உதவி செய்து வருகிறது கலப்பை மக்கள் இயக்கம்.
அதோடு, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகிறது.
இந்த நேரத்தில் தான் இரண்டு நாட்களுக்கு முன்பாக கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக்க் குரல் கொடுக்க வேண்டும் என்று அந்த கோரிக்கையில் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் மதுக்கடைகள் திறக்கவேண்டாம் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமார் கூறியதாவது….
மதுக்கடைகளுக்கு எதிராக குரல் கொடுங்கள் என்று நாங்கள் சொன்ன அந்தக் கருத்தை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு மக்கள் மீது அக்கறை கொண்டு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது மீண்டும் திறந்தால் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள் என்று ரஜினி தற்போது அறிக்கை வெளியிட்டது மனதிற்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்படி ஒரு சூப்பர் ஸ்டாரை தான் தமிழக மக்கள் எதிர்பார்த்தோம். அவருடைய வார்த்தைக்கு வலுவும் ஆட்சியை மாற்றும் வல்லமையும் உண்டு என்பது நமக்குத் தெரியும். அவருடைய ரசிகர்கள் சார்பாகவும் ஏழை எளிய மக்கள் சார்பாகவும் நானும் அவருக்கு கோடான கோடி நன்றியை கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.