
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார்.ஊரடங்குக் காலத்தில் வேளாண் செயல்பாடு, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், சிறுதொழில்கள் மூடப்பட்டதால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்தனர்.
அதன்பின் இரண்டாவது கட்ட ஊரடங்கு ஏப்ரல் 15-ம் தேதி முதல் வரும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 20 ஆம் தேதிக்குப் பின் கொரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பொருளாதாரச் செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.
அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. சரக்கு லாரிப் போக்குவரத்து, வேளாண் பணிகள், மீன்பிடித் தொழில், சுயதொழில்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாணவர்களுக்கான பாடப்புத்தகக் கடைகள், மாவு அரைக்கும் மில்கள், மின்விசிறி விற்பனை செய்யும் எலெக்ட்ரிக்கல் ஸ்டோர், மொபைல் ரீசார்ஜ் கடைகள், பால்பதப்படுத்தும் தொழிற்சாலை ஆகியவற்றைத் திறக்கலாம் என தெரிவித்தது.
இந்நிலையில் 3 ஆவது கட்டமாக பல்வேறு கடைகளை இன்று முதல் செயல்பட அனுமதியளித்து நேற்று நள்ளிரவு
ஒரு உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது…..
இதன்படி மாநில அரசு, யூனியன் பிரதேசதங்களில் கடைகள் மற்றும் நிறுவனச்சட்டத்தில் பதிவு செய்த குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகள், மாநகராட்சி எல்லைக்கு வெளியே இருக்கும் கடைகள்,
நகராட்சியில் உள்ள கடைகள் திறக்க அனுமதி. இங்கு ஊழியர்கள் 50 சதவீதத்துக்கும் குறைவாக பணியில் வைக்கலாம். சமூக விலகலை தீவிரமாகக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் இருக்கும் சில்லரை விற்பனைக் மளிகைக் கடைகள், குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஷாப்பிங் மால் அல்லாத சிறிய கடைகள் போன்றவற்றைத் திறக்கலாம்.
மாநகராட்சி, நகராட்சிக்கு எல்லைக்கு அப்பால் பதிவு செய்யப்பட்ட சந்தைகளுக்குள் இருக்கும் கடைகளைத் திறக்க அனுமதி. இந்தக் கடைகளில் 50 சதவீதம் பணியாட்களை வைத்துக் கொள்ளலாம், முகக்கவசம் அணிந்து, சமூகவிலகலைக் கடைபிடிக்க வேண்டும்.
அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் சலூன்கள்(முடி திருத்தகம்), அழகு நிலையம் ஆகியன சனிக்கிழமை முதல் செயல்படலாம்.
கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் அனைத்து விதமான சந்தைகளும் செயல்பட அனுமதி.
நகர்ப்புறங்களில் அத்தியாவசியமில்லாத பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்படலாம்.
அந்தக் கடைகளில் பொருட்களை விற்கவும், வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கவும் அனுமதி உண்டு.
கிராமப்புறங்களில் அத்தியாவசியமில்லாத சேவைகளை அனைத்து கடைகளிலும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
மாநகராட்சி, நகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து பிறபகுதிகளில் இருக்கும் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் கடைகளை திறக்கலாம்.
வீடுகள், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே இருக்கும் சிறிய கடைகள், பலசரக்கு, சிறு கடைகள் என அனைத்துவிதமான கடைகளைத் திறக்க அனுமதி
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


