
தமிழீழப் பகுதிகளில் மழை வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
பெருவெள்ளப் பாதிப்பிலிருந்து ஈழத் தாயகத்தை மீட்கவேண்டியது உலகத் தமிழர்களின் கடமை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில்….
போரின் பேரழிவிலிருந்து ஈழ மக்கள் மெள்ள மெள்ள மீண்டு வரும் வேளையில், அண்மையில் பெய்த பெருமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் சேதத்தை ஈழ மண் சந்தித்திருக்கிறது.
போரினாலும், நீரினாலும் தொடர் பேரழிவைச் சந்தித்துவருகிற நம் ஈழச்சொந்தங்கள் பேரிடருக்கு ஆளாகி பெரும் துன்பத்தில் துவண்டு நிற்கிறார்கள்.
தமிழகத்தில் தஞ்சை மண்டலமே அழிந்து நிர்மூலமாகி நிற்பது நாம் அறிவோம். அதேபோல் ஈழத்திலும் ஒரு துயர் நிகழ்ந்திருக்கிறது.
இந்த இக்கட்டான சூழலில் இருந்து நம் மக்களை மீட்க வேண்டிய கடமையும், உரிமையும் நமக்குக் கையளிக்கப்பட்டிருக்கிறது.
அதன் காரணமாக தமிழகத்திலிருந்தும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடமிருந்தும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து, இந்தத் துயரத்திலிருந்து அவர்களை மீட்க வேண்டும். அவர்களைத் தத்தளிக்க விடாமல் கைதூக்கிவிடவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அதைச் சிறப்பாக செய்துமுடிப்போம்
இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.


