யூகன் — திரைப்பட விமர்சனம்.

 

மறுபடியும் ஒரு பேய்ப்படம். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் ஐந்து நண்பர்கள் ஒரு பேயிடம் சிக்கிக்கொண்டு ஒவ்வொருவராக உயிரை இழக்கிறார்கள். எதனால் என்பதைப் பயம் கலந்து பார்க்கவைத்திருக்கிறார் புதுஇயக்குநர் கமல்.ஜி.
சித்து, டேவிட், ஷாம், பிரதீப்பாலாஜி, மனோஜ் ஆகியோர் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். ஜாலியாகப் போயக்கொண்டிருக்கும் அவர்கள் வாழ்வில் திடீரென்று புயல்வீசுகிறது. ஒவ்வொருவராக உயிரிழக்கிறார்கள். எப்படிச் சாகிறார்கள்? எனபதையும் ஏன் சாகிறார்கள் என்கிற விசாரணையையும் கலந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.
பேய்ப்படங்களுக்கே உரிய பின்னணிஇசை இந்தப்படத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பேய் மிரட்டுகிறது. ஆனால் அந்தக்காட்சிகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறது.
நாயகனாக வினய்யும் நாயகியாக சாக்சிஅகர்வாலும் நடித்திருக்கிறார்கள். இருவருக்கும் காதல் மலரும் காட்சிகள் சுவையாக இருக்கின்றன. ஒரு பெண்ணைப் பார்த்ததும் காதலில் விழுந்து அதை வெளிப்படுத்த தன்னுடைய வேலையையே விட்டுக்கொடுக்கும் நாயகன் வினய் சரியாக நடித்திருக்கிறார்.
தான் செய்யாத தப்புக்காகப் பழி சுமப்பதைத் தாங்கமுடியாமல் அலையும் காட்சிகளில் முதல்படநாயகி என்பதை மறக்கவைத்துவிடுகிறார் சாக்ஷி. அவருடைய கணினியில் இருந்து இன்னொரு நிறுவனத்துக்கு ஆவணங்களை அனுப்பிவிட்டு பழியை அவர்மேல் போடுகிறார்கள். அந்தக் காட்சிகள் எதார்த்தமாக இல்லை. உணவகத்தில் சண்டை போட்டு மேலதிகாரியின் கவனத்தைத் திருப்புகிறார்கள் என்பதெல்லாம் எவ்வளவு பழையவை.
பேயாகவும் சாக்ஷியே நடித்திருக்கிறார் என்று சொன்னால்தான் தெரியும். அவ்வளவு முகப்பூச்சு. கொலைகளைப் பேய் செய்கிறதா அல்லது கூடவே இருக்கும் யாராவது ஒருவர் செய்கிறாரா என்கிற சந்தேகத்தை உருவாக்கவேண்டுமென்பதற்காக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை மிகவும் குழப்பமாக இருக்கிறது.
நண்பர்களாக நடித்திருப்பவர்களின் பாத்திரப்படைப்புகள் இக்கால மென்பொருள்நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களுடைய தன்முனைப்பை மட்டுமே பெரிதாகக் கருதும்போக்கு எவ்வளவு தப்பு என்பதை இந்தப்பாத்திரங்கள் மூலம் சொல்ல விழைந்திருக்கிறார் இயக்குநர்.
இந்தப்படத்தில் நடக்கும் காவல்துறை விசாரணை, வழக்கத்துக்கு மாறாக இருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் வழக்கம்போலவே இருக்கிறது என்பதுதான் சலிப்பூட்டும் உண்மை. காவலதிகாரியாக நடித்திருப்பவர் நன்றாக நடித்திருக்கிறார்.
ரவிஆறுமுகத்தின் ஒளிப்பதிவுக்கும் அலெக்ஸ்பிரேம்நாத்தின் பின்னணிஇசைக்கும் அதிக முக்கியத்துவம் படத்தில் இருக்கிறது. அவர்கள் தங்கள் பங்கைத் தப்பில்லாமல் செய்திருக்கிறார்கள்.
படத்தின் ரகசியத்தைக் கடைசிவரை காத்திருப்பது இயக்குநரின் பலம் என்றாலும் அதுவரை ரசிகனைத் தக்கவைக்கிற அளவு படம் இல்லை என்பதையும் சொல்லித்தானாக வேண்டும்.

Leave a Response