நீதிபதி லோயா மரணம் – வசமாகச் சிக்கும் அமித்ஷா

சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் பி.எச்.லோயா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் செராபுதீன் ஷேக், போலி என்கவுன்ட்டர் வழக்கை லோயா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் மாநிலங்களவை எம்பி-யும், பாஜக தலைவருமான அமித் ஷாவும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். லோயா மரணத்திற்குப் பின் பொறுப்பேற்ற நீதிபதி இந்த வழக்கில் இருந்து அமித் ஷாவை விடுவித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் லோயாவின் மரணம் திட்டமிடப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் வெளியாகியுள்ள கட்டுரையில்….

நீதிபதி பி.எச். லோயாவின் திடீர் மரணம், நான்காண்டுகள் ஆகியும் இன்னும் கனன்று கொண்டே இருக்கிறது. அவரது மரணத்திற்கு நீதி கேட்டு, சமூக ஆர்வலர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட, நாட்டின் முக்கியமான அரசியல் கட்சிகளின் தலைவர்களோ, குடியரசுத் தலைவர் மாளிகையிடம் மனு அளித்து நீதிக்காக காத்திருக்கின்றனர். லோயாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. உச்ச நீதிமன்றமும் இவ்வழக்கின் முக்கியத்துவம் உணர்ந்து, தலைமை நீதிபதியின் அமர்வில் விசாரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில்தான், நீதிபதி பி.எச். லோயாவின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் திசு ஆய்வறிக்கை தொடர்பாக டாக்டர் ஆர்.கே. சர்மா வெளியிட்டுள்ள செய்திகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

சந்தேக ரேகைகள் முடிவுக்கு வருகின்றன

பி.எச். லோயாவின் மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கையைப் படித்துப் பார்த்தால், “அவர் மாரடைப்பால் இறக்கவில்லை; மூளையில் அடிபட்டதன் காரணமாகவோ அல்லது விஷம் அருந்தியோ இறந்திருக்கிறார் என்ற முடிவுக்குத்தான் வரமுடியும்” என்று டாக்டர் சர்மா அதிர்ச்சியூட்டியுள்ளார். இவ்வழக்கில் படிந்திருந்த சந்தேக ரேகைகளை சர்மாவின் ஆய்வு முடிவு உறுதிப்படுத்தி இருக்கிறது.தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் மற்றும் நச்சுவியல் துறையின் முன்னாள் தலைவர்தான் டாக்டர் ஆர்.கே. சர்மா. கடந்த 22 ஆண்டுகளாக இந்திய மருத்துவ சட்ட அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார்.தடயவியல் மற்றும் மருத்துவ சட்ட விவகாரங்கள் தொடர்பாக ஐந்து புத்தகங்களை எழுதியுள்ளார். நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு தொடர்ந்து பயிற்சியும் அளித்து வருகிறார்.மத்திய புலனாய்வுத்துறையில் ஆலோசகராக இருந்த டாக்டர் சர்மாவை, அமெரிக்காவின் உளவு அமைப்பான ‘எப்.பி.ஐ’ தான் நடத்திய சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்க வைத்தது. சர்மாவும், தடய அறிவியல் மற்றும் நச்சுவியல் ஆகியவற்றில் பல தேசிய மற்றும் சர்வதேச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவ நிபுணரான சர்மாதான், நீதிபதி பி.எச். லோயாவின் மரண அறிக்கையில் இருக்கும் தவறான முடிச்சுகளை அவிழ்த்துள்ளார்.“லோயாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை” என்று மகாராஷ்டிரா அரசுக்கு, அம்மாநில புலனாய்வுத்துறை அறிக்கை அளித்துள்ள நிலையில், லோயாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை, திசு பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை வைத்து, புலனாய்வுத்துறை அறிக்கையை அடித்து நொறுக்கியுள்ளார்.லோயா மாரடைப்பால் இறந்தார்; இது திடீர் மற்றும் இயற்கையான மரணம்தான் என்று கூறும் மருத்துவ அறிக்கைகள் எவ்வளவு குளறுபடிகளைக் கொண்டிருக்கின்றன என்பதை ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்துள்ளார்.“மருத்துவ அறிக்கைப்படி லோயாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறும் டாக்டர் சர்மா, “நீதிபதி லோயாவின் பிரேத பரிசோதனை, திசு பரிசோதனை அறிக்கையின் படி, அவரது உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன; ஆனால் நிச்சயமாக மாரடைப்பு ஏற்படவில்லை” என்பதை உறுதிப்படுத்துகிறார்.“லோயாவின் ரத்தக் குழாய்களில் சுண்ணாம்பு படிந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது; ஒருவருக்கு ரத்த குழாய்களில் சுண்ணாம்பு படிந்திருந்தாலும் அவருக்கு ரத்த ஓட்டம் நிச்சயமாக தடைப்படாது; அதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கு நிச்சயமாக வாய்ப்பே இல்லை” என்கிறார்.

அதிகாலை 4 மணி

நீதிபதி லோயா இறந்த அன்று (2014 டிசம்பர் 1) அதிகாலை 4 மணிக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் காலை 6.15 மணிக்கு இறந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளது. அதாவது உடல்நிலை பாதிக்கப்பட்டு 2 மணி நேரத்தில் அவர் இறந்திருக்கிறார்.மாரடைப்புக்கான அறிகுறி தெரிந்த பின்பு அவர் 30 நிமிடங்கள் உயிருடன் இருந்திருந்தாலே, கண்டிப்பாக அவரது இருதயத்தின் நிலையில் மாற்றம் இருக்கும்; ஆனால் அது போன்ற மாற்றம் ஏதும் இருந்ததாக அறிக்கையில் தெரியவில்லை என்பதை சர்மா சுட்டிக்காட்டுகிறார். மற்றொன்று “கரோனரி இதய நோயினால் நீதிபதி லோயா இறந்ததாக, அவரின் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது; பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு கரோனரி இதய நோய்க்கான அறிகுறி தென்படும்; ஆனால், லோயாவுக்கு கரோனரி இதய நோய் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை” என்று தெரிவிக்கும் டாக்டர் சர்மா, மாறாக லோயாவின் தலையில் அடிபட்டிருப்பதற்கான தடயங்களே உள்ளதாக கூறுகிறார்.

காயம்… ரத்தம்…

“லோயாவின் பிரேத பரிசோதனை அறிக்கையைப் பார்த்தால், மூளை மற்றும் தண்டுவடத்தை மறைக்கும் வெளிப்புற மென்படலமான டூரா பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது; மூளையில் அடிபட்டிருந்தால்தான் இதுபோன்ற பாதிப்பு ஏற்படும்” என்கிறார்.நீதிபதி லோயாவின் சகோதரியும், மகாராஷ்டிரா மாநில அரசு மருத்துவருமான மருத்துவர் அனுராதா பியானி, “தான், முதல் முறையாக லோயாவின் உடலை பார்க்கும் பொழுது, அவரது கழுத்தின் பின் பகுதியில் ரத்தக் காயம் இருந்தது” என்று கூறியிருந்தார். அதையே டைரி குறிப்பிலும், “லோயாவின் சட்டைக் காலரில் ரத்தம் இருந்தது” என பதிவு செய்திருந்தார்.“லோயாவைப் பார்த்தபோது அவரது தலையின் பின்பகுதியில் அடிபட்டு ரத்த காயம் இருந்தது” என்று லோயாவின் தந்தை ஹரிகிருஷ்ண லோயா மற்றும் சகோதரி சரிதா ஆகியோரும் தெரிவித்திருந்தனர் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.“லோயா இறக்கும் பொழுது அவருக்கு 48 வயது; புகைப்பிடிப்பது, மது அருந்துவது, பாரம்பரிய இருதய நோய் என ஏதும் அவருக்கு இல்லை; அவர் தினமும் இரண்டு மணி நேரம் டேபிள் டென்னிஸ் விளையாடுவார்; நீரழிவு, ரத்த அழுத்தம் கூட இல்லை; எங்கள் பெற்றோர்களுக்கு 85 மற்றும் 80 வயதாகிறது; இருதய நோய் ஏதும் இல்லாமல் அவர்கள் ஆரோக்கியமாக தான் உள்ளனர்” என்ற தகவலையும் லோயாவின் சகோதரி அனுராதா இணைத்துக் காட்டுகிறார்.

நாக்பூர் மருத்துவமனை ஏமாற்று…

நீதிபதி லோயா இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாக்பூர் மெடிட்ரினா மருத்துவமனை, உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக, மகாராஷ்டிரா அரசுக்கு கொடுத்த அறிக்கையில், “லோயா இருதய பிரச்சனையுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்” என்று குறிப்பிட்டு, அவருக்கு நியூரோ சர்ஜரி செய்யப்பட்டதற்கான ரசீதை இணைத்திருந்தது.ஆனால், “பிரேத பரிசோதனை அறிக்கையில், டூரா எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது; அது எதனால் பாதிக்கப்பட்டது என குறிப்பிடப்படவில்லை. இது மிகவும் வினோதமாக உள்ளது” என்கிறார் சர்மா.மேலும் கல்லீரல், கணையம், மண்ணீரல், சிறுநீரகங்கள், உணவுக்குழாய், நுரையீரல் என உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதையும் அவர் கேள்விக்கு உட்படுத்துகிறார். “இந்த அறிக்கையை வைத்துப் பார்க்கும் பொழுது, லோயாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம்” என்ற மற்றொரு சந்தேகத்தையும் எழுப்புகிறார்.“லோயா இறந்து 50 நாட்களுக்கு பிறகு, அவரின் உள்ளுறுப்பு மாதிரிகளில் ரசாயன ஆய்வு செய்யப்பட்ட போது, விஷம் இருந்ததாக தெரியவில்லை; நாக்பூரில் உள்ள பிராந்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது; நவம்பர் 30 டிசம்பர் 01, 2014 நள்ளிரவில் இருந்து 14 நாட்கள் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது; ஆனால் இந்த ஆய்வை மேற்கொள்ள ஒன்று அல்லது இரண்டு நாட்கள் போதுமானது; ஆனால் எதற்காக இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டார்கள்” என சர்மா கேட்கிறார்.“உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு சமர்ப்பித்த அறிக்கைப்படி, முதலில் நாக்பூர் சீதாபுல்தி காவல் நிலையத்தில் ஜீரோ- முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது; சீதாபுல்தி காவல் நிலையம் மூலமாக பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; அதன்படி நாக்பூர் அரசு மருத்துவமனையில், டிசம்பர் 01-ஆம் தேதி காலை 10.55 முதல் 11. 50 மணி வரை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது; இந்த சமயத்தில் தான் ஆய்விற்காக திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது; பின்னர் மாலை 4 மணியளவில் முதல் தகவல் அறிக்கை நாக்பூர் சர்தார் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது; சர்தார் காவல் நிலையம் தான் பரிந்துரை கடிதத்துடன் நீதிபதி லோயாவின் திசு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.“அப்படியானால், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது முதல், வழக்கு சர்தார் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட காலகட்டம் வரை, திசு மாதிரிகள் யாருடைய பொறுப்பில் இருந்தன, யாருடைய மேற்பார்வையின் கீழ் திசு மாதிரிகள் சர்தார் காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்டன?” என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்பும் சர்மா, “அதற்கான தகவல்கள் எதுவும் அறிக்கையில் தெளிவாக இல்லை; அதேபோல, பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் மாதிரிகளை ஏன் தடவியல் ஆய்வகத்திற்கு அனுப்பவில்லை என்பதற்கும் பதிலில்லை” என்கிறார்.

இருவேறு அறிக்கைகள்

இன்னொரு முக்கியமான விஷயமாக, நீதிபதி லோயாவின் இறப்பு மற்றும் அவரது உடல்நிலை குறித்து, பிரேத பரிசோதனையில் உள்ள தகவல்களும் திசு ஆய்வில் உள்ள தகவல்களும் முரண்படுவதாகவும் கூறுகிறார். “பிரேதப் பரிசோதனை அறிக்கைப்படி, ரிகார் மார்டிஸ் என்னும் உடலின் விறைப்புத் தன்மையை பதிவுச் செய்யும் பகுதியில், மேல் மூட்டுகளில் சிறிதளவு இருக்கிறது எனவும், கீழ் மூட்டுகளில் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது; இதுவே திசு ஆய்வறிக்கையில், விறைப்புத் தன்மை நன்றாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது; உடலின் விறைப்புத் தன்மை ஒரே சமயத்தில் இருவேறாக இருக்க முடியாது” என்கிறார்.இறப்பிற்கான காரணம் என்ற பகுதியில் – பிரேதப் பரிசோதனை அறிக்கை ‘கரோனரி இருதய நோய்’ என்று குறிப்பிட, திசு ஆய்வறிக்கையோ ‘திடீர் மரணம்’ என குறிப்பிட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.அதேபோல வழக்கின் விவரம் என்ற பகுதியில், திசு ஆய்வறிக்கையில் “இயற்கை மரணம்” என குறிப்பிடப்பட்டு, இயற்கை மரணம் என்ற வார்த்தை கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. ஆனால் லோயாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்புவதற்கு முன்பாக நாக்பூர் சீதாபுல்தி காவல் நிலையமானது “தற்செயலான மரணம்” என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது என்பன உள்ளிட்ட விஷயங்களையும் சர்மா அடுக்குகிறார்.பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் திசு ஆய்வறிக்கை இரண்டுமே நாக்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் தயாரிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட திசு ஆய்வறிக்கையை வைத்து பார்க்கும் பொழுது, திசு ஆய்வறிக்கையில் உள்ள தகவல்கள் பிரேதப் பரிசோதனையை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. பிரேத பரிசோதனை செய்த அதே மருத்துவர் தான் இந்த ஆய்வறிக்கையும் தாயார் செய்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.இரசாயன ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும் பொழுது, பிரேத பரிசோதனையில் உள்ள தகவல்கள் திசு ஆய்வறிக்கைக்கும் பயன்படுத்தப்படுவது நடைமுறைதான் என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தடவியல் துறை மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அந்த வகையில், நீதிபதி லோயா விவகாரத்தில் இரண்டு ஆய்வறிக்கைகளிலும், அரசு மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றும் மருத்துவர் என்.கே. துமாராம் கையெழுத்திட்டுள்ளார்.

வரிக்கு வரி அம்பலமாகிறது

பிரச்சனை என்னவென்றால், ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு அறிக்கையிலும் கூறப்பட்டுள்ள தகவல்கள் மாறுபடுகின்றன என்பதுதான்.இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, லோயா வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், தற்போதைக்கு இதுவிஷயமாக ஏதும் கூறமுடியாது என துமாராம் சாமர்த்தியமாக தப்பித்துள்ளார். எனினும் என்றாவது இக்கேள்விக்கு அவர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.ஒட்டுமொத்தமாக, லோயா மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை, திசு அறிக்கை உட்பட அனைத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலான ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன என்பதுதான் டாக்டர் ஆர்.கே. சர்மாவின் கருத்தாகும். அவற்றை வரிக்கு வரி சர்மா அம்பலப்படுத்தி இருக்கிறார். அதனடிப்படையில்தான், நீதிபதி பி.எச். லோயாவின் மரணம் கண்டிப்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நன்றி : ‘தி கேரவன்’ இணைய ஏடு- தமிழில் : ஆர்.சரண்யா

Leave a Response