நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் நவம்பர் 21,2017 அன்று தற்கொலை செய்துகொண்டார். அவர் கடைசியாக எழுதிய கடிதத்தில்,நாங்கள் செய்த பெரிய பாவம் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது. வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்கள் வாங்கியவர். கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார். என் குடும்பத்தினரை தூக்கி விடுவதாக மிரட்டினார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையொட்டி, கந்துவட்டிக் கொடுமைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கந்துவட்டிக்கு எதிராகப் பேசியதோடு சீமானைப் பற்றியும் பேசியிருந்தார்.
அவர், தமிழ்த் திரையுலகமே அதிர்ந்து போயுள்ள இத்தகைய சூழலில் அன்புச்செழியனுக்கு ஆதரவாகப் பேசியுள்ள இயக்குனர் சீமான், ‘அன்புச் செழியன் யாரிடமும் என்கிட்ட வந்து பணம் வாங்கு என கூறவில்லை. சாமானியர்களை நம்பி அன்புச்செழியன் பல கோடி ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார். அரசு வங்கியே ரூ.1 லட்சம் கடனுக்குக் கட்டி வைத்து அடிக்கவில்லையா? கடனைக் கொடுத்தவர் கேட்கிற முறையில் கடுமை கேட்கிற போது தன்மான இழப்பாகக் கருதி உயிரிழப்பு ஏற்படுகிறது. அன்புச்செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாது என கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாது’ என்று பேசியுள்ளார். இது கந்துவட்டிக்காரர்களின் குரலே தவிர வேறல்ல. கந்துவட்டிக் கொடுமைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கந்து வட்டி ஒழிப்புச் சட்டத்தை அமலாக்கிட வேண்டுமென்றும் மக்கள் மத்தியில் தமிழ்நாடு முழுவதும் வலுவான குரல் ஓங்கி ஒலிக்கிற போது கந்துவட்டிக்காரர்களுக்கு ஆதரவாக பேசுவது சரியான அணுகுமுறையல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியிருந்தார்.
கந்துவட்டிக்கு ஆதரவாளராகத் தன்னைச் ஜி.ராமகிருஷ்ணன் சித்தரிப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நெல்லையில் ஒரு குடும்பமே கந்துவட்டிக் கொடுமையினால் தீக்குளித்து மாண்டபோது அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தாலும், அக்கறையின்மையினாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப்படுகொலை இதுவெனக் கண்டனம் தெரிவித்து, 2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கந்துவட்டித் தடைச் சட்டத்தை ஏன் இன்னும் செயலாக்கம் செய்யவில்லை எனக் கேள்வியெழுப்பினேன். மேலும், கேரளாவில் அமல்படுத்தியது போல ஆபரேசன் குபேராவைத் தமிழகத்திலும் அமல்படுத்தி கந்துவட்டியின் கொடுமையை முழுமையாய் துடைத்தெறிய வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். அப்படியிருக்க, என்னைக் கந்து வட்டி ஆதரவாளன் எனும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களின் கருத்து அபத்தமானது.
தம்பி அசோக்குமார் தற்கொலையைப் பொறுத்தவரை அம்மரணம் பெரிய வலியைத் தந்தது. உற்றத் துணையாக இவ்வளவு பேர் இருந்தும் யாரிடமும் சொல்லாமல் தம்பி தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரே என அவரது இழப்பு தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. இதில் தொடர்புடைய அன்புச்செழியன் விசாரிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. அதேசமயம், இதனைத் தனக்குச் சாதகமாக்கி சுயலாபம் காண எண்ணுவோரின் செயலைத்தான் வன்மையாக எதிர்க்கிறேன். இவ்வளவு நாட்களாக அன்புச்செழியனிடம் பணம்பெற்று தொழில் நடத்திவிட்டு, இன்றைக்குத் தன்னை அத்தொழிலுக்கு எதிரானவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்வது உள்நோக்கமுடையது.
தயாரிப்பாளர் ஜி.வி.யின் தற்கொலையின்போதே விழிப்புற்று மாற்று பொருளாதார ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்யாது விடுத்து தற்போது அதனைப் பேசுவது சந்தர்ப்பவாதமாகும். இதனைத்தான் எடுத்துரைத்தேன். மற்றபடி, அன்புச்செழியனின் செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கவும் இல்லை; அதற்கு நாங்கள் பொருட்பேற்கவும் இல்லை. பைனான்சியர்களிடம் பணம் பெற்றே அனைத்து படங்களும் எடுக்கப்படுகிறது என்பது கள எதார்த்தம். அதற்கான ஒரு மாற்றுத்தீர்வை முன்வைக்காது அம்முறையையே ஒழிக்க வேண்டும் என்பது திரைத்துறைக்குப் பாதகமாகவே முடியும். எனவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு இதற்கான ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும்.
தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சிக் கழகம் போன்ற அமைப்பின் மூலம் தமிழக அரசே தரமான படைப்புகளைத் தயாரிக்க முன்வந்தால் இதனைச் சரிசெய்ய முடியும் என்கிறேன். அதுவரை அன்புச்செழியன் போன்றோரை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் தான் தமிழ்த்திரைத்துறை இருக்கிறது.
அதற்காகக் கடனை வசூலிப்பதற்கு அத்துமீறுவதும், அவமானப்படுத்துவதுமானப் போக்குகளில் எமக்கு உடன்பாடில்லை. அன்புச்செழியன் விசாரிக்கப்பட வேண்டியவர் என்பதையும், அவரது பொருளாதாரப் பின்புலமும், அரசியல் பின்புலமும் ஆராயப்பட வேண்டும் என்பதையும் நானே ஊடகங்களில் தெளிவுபடப் பேசியிருக்கிறேன்.
ஆனால், இதனை முழுமையாய் உள்வாங்கிக் கொள்ளாது, கருத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு பேச்சின் சாராம்சத்தையே அடியோடு மாற்றி என்னைக் கந்துவட்டி ஆதரவாளர் போலவும், அன்புச்செழியனுக்கு ஆதரவளித்து அவரது செயல்களுக்கு நியாயம் கற்பிப்பது போலவும் அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களின் செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியது. அவரது இப்போக்கினை முற்றாக எதிர்க்கிறேன்.
திரைத்துறையை சீர்திருத்தம் செய்யும் நோக்கத்தோடு கூறப்பட்ட எனது கருத்துக்களை பொது வாழ்க்கையில் நீண்ட நெடிய அனுபவத்தைக் கொண்டிருக்கிற பெருமதிப்பிற்குரிய ஜி.ராமகிருஷ்ணன் போன்றவர்களே திரித்துக்கூறி இட்டுக்கட்டுவது வேதனை அளிக்கிறது. யாவற்றையும் ஆராய்ந்து அதன் உண்மையைக் கண்டறியும் பகுத்தறிவைப் போதித்த மாமேதை மார்க்சை வழிகாட்டியாக ஏற்றவர்களுக்கு இது அழகல்ல!
ஆகவே, மதிப்பிற்குரிய ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், இனிமேலாவது முழுமையாகக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தங்களது மதிப்புமிகு சொற்களைக் கையாள வேண்டும் எனவும் அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.