
சுந்தரபாண்டியன் படத்தில் சசிக்குமார், விஜய்செதுபதி, அப்புக்குட்டி என அனைவருக்கும் நண்பனாக, பரஞ்சோதி கேரக்டரில் நடித்தவர் சௌந்தரராஜா. தனது பிறந்தநாளான ஆகஸ்டு 11ல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படும் ஒரு அற்புதமான காரியத்தை செய்துள்ளார்.
ஆம்.. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகில் உள்ள உமையாள்பரணச்சேரி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 25 வளர்ந்த பெரிய மரக்கன்றுகளை மாணவர்களுடன் சேர்ந்து நட்டு, அதை வளர்க்க ஏற்பாடு செய்து தன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார், சௌந்தரராஜா.
பெயருக்கு மரக்கன்று நட்ட நிகழ்வாக அது இருக்கக்கூடாது என்று நினைத்த சௌந்தரராஜா தன் சொந்த செலவில், முறையாக பெரிய குழிகள் தோண்டி, அடிப்படை உரமிட்டு, ஆடு, மாடுகள் கடிக்காமல் இருக்க, ரூபாய் 1200க்கு மேல் விலையுள்ள ஆளுயர பாதுகாப்பு கூண்டுகள் ஒவ்வொரு மரக்கன்றுக்கும் ஏற்பாடு செய்து, அவற்றை முறையாக வளர்க்க உறுதி, மற்றும் ஏற்பாடும் செய்திருக்கிறார்.
ஆள் உயரத்திற்கு வளர்ந்த பூவரசு, புங்கம், நாவல், ஐந்து இதழ் பாலை, வேம்பு ஆகிய வகையில் 25 மரக்கன்றுகள், இயற்கை அடி உரம் இடப்பட்டு நடப்பட்டது. மரம் நட்ட நாளில் இருந்து தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதால் சௌந்தரராஜா உள்பட சம்பந்தப்பட்ட அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.


