
கதிரியக்க கழிவுப் பொருட்களை, இலங்கையில் இந்தியா குவிக்க முடியாது, என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது,
இந்தியா – இலங்கை இடையேயான அணுசக்தி ஒப்பந்தம், அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தப்படி, இந்திய அணு மின் நிலையங்களின் கதிரியக்க கழிவுகளை, இலங்கையில் குவிக்க முடியாது. இந்தியாவிற்கு இதற்கான அனுமதியை, கதிரியக்க கழிவு மேலாண்மை வழங்கவில்லை.
அணுசக்தியை அமைதியான முறையில், ஆக்கபூர்வ பயன்பாட்டிற்கு பயன்படுத்தவே, இந்தியாவும், இலங்கையும் ஒப்பந்தம் செய்துள்ளன.
இதன்படி, அணு தொழில்நுட்ப அறிவாற்றல் மற்றும் வளங்களை பகிர்ந்து கொள்ளவும், பயிற்சி தரவும், உற்பத்தித் திறனை உயர்த்தவுமே ஒப்பந்தம் வகை செய்கிறது.
கதிரியக்க கழிவுகளை இலங்கையில் கொட்டுவதற்கு அல்ல. இலங்கை, விரைவில் பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள அமைச்சரின் இந்தப் பேச்சு, இந்திய அரசை வெறுப்பேற்றும் விதமாகவே இருக்கிறதென்று அரசியல் பார்வையாளர்கள் சொல்கின்றனர்.


