ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறது என்று ஆளும் பாஜகவினர் அடித்துவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக எல்லாத் தரப்பினரும் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிறையப் போராட்டங்கள் நாடெங்கும் நடக்கின்றன. சமூக ஊடகங்களிலும் ஜிஎஸ்டிக்கு எதிராகக் கடுமையான கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன். திரைப்படத்துறையைச் சேர்ந்த சங்கர்குமார் எழுதியுள்ள பதிவில்…..
ஜிஎஸ்டி வரிவிதிப்பு பற்றி இன்று நிறைய படித்தேன்.தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய தலைமுறையில் விவரமாக ஜிஎஸ்டி பற்றி பேசியதைக் கேட்டேன்.ஒரு சாமானியனாக எனக்கு எழுந்த சந்தேகம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது மறைமுகமாக கார்ப்பரேட் கம்பெனிகளை வாழவைப்பது.சிறு தொழில்களை,சிறு வணிகத்தை அழிப்பது.வெளிநாட்டினரின் பார்வைக்கு இந்தியா ஏழை தேசமல்ல,அது ஒரு வளர்ந்து வரும் கார்ப்பரேட் தேசம் என காண்பிக்க நினைக்கும் பொய் தோற்றம்.
எனக்கு எழுந்த கேள்விகள் இவை.
1.எந்த மண்ணில் பிறந்தோமோ ,அங்கு கிடைக்கும் உணவுதான் நாம் உண்ண வேண்டும் என்றார் நம்மாழ்வார். நாம் உண்ணும் இட்லிக்கும்,தோசைக்கும் 18% ஜிஎஸ்டி.கார்ப்பரேட்காரனின் பீட்சாவுக்கு 5% ஜிஎஸ்டி ஏன்? எங்களை பீட்சா சாப்பிட சொல்கிறீர்களா?
2.என் சகோதரர்கள் உற்பத்தி செய்யும் தீப்பெட்டிக்கும், பட்டாசுக்கும் 18% ஜிஎஸ்டி.
டியூரக்ஸ்,காமசூத்ரா போன்ற கார்ப்பரெட் கம்பெனிகள் உற்பத்தி செய்யும் ஆணுறைக்கு 0% ஜிஎஸ்டி. எங்கள் தேவை இப்போது காண்டம்தானா மோடிஜி?
3.அரசியல்வாதிகளும்,அம்பானிகளும்,அதானிகளும் தங்கள் பணத்தை பங்கு சந்தைகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்.ஷேர்மார்க்கெட் ஜிஎஸ்டி லிஸ்ட்லயே இல்லையே ஏன்? உங்களூக்கு நீங்களே வரிவிதிக்க வேண்டிவரும் என்பதால் அதை தவிர்த்துவிட்டீர்களா?
4.கியூபா, டென்மார்க் போன்ற நாடுகளிலும் ஒரே தேசம்,ஒரே வரி இருக்கிறது.ஆனால்,அந்த நாடுகளில் கல்வியும்,மருத்துவமும் இலவசம்.நீங்கள் அதில்தான் கொள்ளையே அடிக்கிறீர்கள்.
5.நள்ளிரவில் பார்லிமெண்ட் கூடி,ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இது என்ன வடகொரியாவா?
வணிகர்களின் கருத்தைகேட்டீர்களா?
இந்தியாவின் இரும்பு முதல்வர் மம்தா பானர்ஜியின் விமர்சனத்துக்கு பிரதமரின் பதில் என்ன?
6.இந்தியா, அமெரிக்கா ஆகவேண்டாமா? என்று கோபப்படுகிறார் தொழில் மந்திரி நிர்மலா சீதாராமன். ஒரு சாதாரண தொழிலாளிக்கு அமெரிக்காவில் என்ன சம்பளம் தெரியுமா?
நீங்கள் தொழிலாளிக்கு கொடுக்கும் சம்பளம் பிச்சை காசு.இதற்கு வரிவிதிப்பு வேற.கடலைமிட்டாய்க்கு 18% ஜிஎஸ்டி என்றால்,பாவம் கோவில்பட்டிக்காரன் போராடவா போகிறான் என்கிற அலட்சியம்.திமிர்.சர்வாதிகாரம்.
7.விவசாயிகள் டெல்லியில் போராடியபோது,அவர்களை எதற்கு பிரதமர் சந்திக்கணும் .அவசியமில்லையே என்றீர்களே…இப்போது மட்டும் எப்படி விவசாயி வாங்கும் உரத்திற்கு ஜிஎஸ்டி போடுகிறீர்கள்?
8. மக்களுக்குத்தான் அரசாங்கமே தவிர, அரசாங்கத்திற்கு மக்கள் அல்ல. மக்களின் சாபத்திற்கு ஆளானால் அதற்கு பின்னால் பெரிய வீழ்ச்சி காத்திருக்கிறது.வீழத் தயாராகுங்கள்…!
இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.