தந்தி தொலைக்காட்சியில் ரஜினி சம்பந்தப்பட்ட விவாத நிகழ்வில் நடந்தவற்றை விளக்குகிறார் இயக்குநர் பாலமுரளிவர்மன், அவருடைய பதிவில்….. ரஜினி ஏன் அரசியலுக்கு வரத்தயங்குகிறார்?
ஏன் நம்பிக்கையின்றி இருக்கிறார்?என்பதற்கான காரணத்தை அவரது ரசிகர்கள் நேற்று மிகச் சிறப்பாக தெளிவுப்படுத்திவிட்டார்கள்.
ரஜினி அரசியலுக்கு வர அஞ்சுவதற்கு காரணம் அவரது ரசிகர்களே என்பது மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக நிரூபணமானது.
தந்தி தொலைக்காட்சியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நேற்று சேத்துப்பட்டில் நடந்தது.
இந்த கேலிக்கூத்துகள்,விவாதங்கள் எல்லாம் நேரவிரயம் என்பதில் நான் உறுதியாக இருப்பதால் தொலைக்காட்சிகள் என்னை விவாதங்களுக்குள் பங்கேற்க அழைக்கும்போது பலமுறை தவிர்த்திருக்கிறேன்.அமீரண்ணன் அழைத்ததால் பார்வையாளராக உடன் சென்றேன்.
மலக்குவியல்களுக்கு மத்தியில் உட்கார்த்திவைக்கப்பட்டவனாக
அருவெறுப்பு சூழ்ந்தது.
மக்கள் நலனுக்காக வலிமைமிக்க அதிகார வர்க்கத்தை எதிர்த்து மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்த மகத்தான போராளி அண்ணன் சுப உதயகுமார் அவர்களை அவர் நமக்காகத்தான் பேசுகிறார் போராடுகிறார் என்பதைக் கூட புரிந்துகொள்ளாத போதைக் கூட்டம் வெறிக்கூச்சலிட்டு அடிக்கப்பாய்ந்தது.
உதயகுமார் கேள்விகளை வேகத்துடன் வீசினார்.
காவித்துண்டோடு வந்திருந்து அவர்களின் பாரத் மாதாவை கேவலப்படுத்திய பயங்கரவாதிகளும் கூச்சலிட்டனர்.அவர்களின் எண்ணிக்கை குறைவு தான்.தமிழர் மண்ணில் மட்டுமல்ல அரங்கத்திலும்.
அண்ணன் சுப உதயகுமார் அவர்களை
அமீரண்ணன் இருக்கையில் அமரச்செய்தார்.
நெஞ்சுப் பொறுக்கவில்லை எனக்கு.
எழுந்து நின்று கத்தினேன்.
நாம் ஏன் நிறுத்தவேண்டும்?
இந்த இனம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை இவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
“உதயகுமாரண்ணே நீங்க பேசுங்க”
ஆண்மையோடும் ஆளுமையோடும் அத்தனை வெறியர்கள் மத்தியில் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று ரஜினி அரசியலுக்கு வருவது எதிர்க்கவேண்டியதே என்கிற அணியின் வாதத்தை கூர்மையாக வீசினார்.
ரசிக நோய்களுக்கு புரியுமா?
கத்திக்கொண்டே இருந்தன.
பொறுக்கமுடியாமல் அமீரண்ணன் வெளியேறிவிட யத்தனித்தார்.
அவரைத் தொடர்ந்து அய்யா நாஞ்சில் சம்பத் அவர்களும் வெளியேறும் முடிவெடுத்தார்.பாண்டே சமாதானப் படுத்தினார்.
ரசிகர் சாம்வேல்,நடிகை கஸ்தூரி,அர்ஜூன்சம்பத் ஆகியோர் தமது நலனை முன்னிட்டு ரஜினி அரசியலுக்கு வருவது யதார்த்தமே என்கிற அணியாக ஆதரித்துப் பேசினர்.
அமீரண்ணன் எதிர்க்கவேண்டியதே என்கிற அணியில் நின்று,ரஜினி வருவதைவரவேற்கிறேன் என்றும்
வந்தால்,எங்கள் பெற்றோர் தொலைத்ததை எங்களிடம் திருப்பிக் கொடுங்கள் என்றும் சாதுர்யாமாக இரு தரப்புக்கும் பேசினார்.
இறுதியாக பேசிய நாஞ்சில், நேருக்கு நேராக ரசிக ஈக்களை வன்மையக கண்டித்தார்.இவ்வளவு அநா கரீகமான சபையை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை.இந்த அவமானத்தை எனக்கு தேடித்தந்த பாண்டேவுக்கு நன்றி
என்றார்.அவமானத்தின் வலி அவரது மூச்சிலும் பேச்சிலும் கசிந்தது.
அவரது அரசியலில் எமக்கு முழு முரண்பாடு. ஆனால் நேற்று தமிழின் மீது அடிவிழுந்ததால் அந்த வலி எனக்குள் இறங்கியது.நாஞ்சிலுக்கும் உதயகுமாருக்கும் நேர்ந்த அவமானம் எனக்கு நேர்ந்ததாய் இன்னமும் கொதிக்கிறது.