
அதிமுக – பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி அறிவிக்கப்பட்டார். இதை ஏற்கமுடியாமல் புதிய நீதிக் கட்சியின் அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் வி.எஸ்.கார்த்தி அக்கட்சியிலிருந்து விலகி ஏ.சி.சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
வி.எஸ்.கார்த்தி மதுரையைச் சேர்ந்தவர். அவர் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட முடிவுசெய்து கடந்த 2 ஆண்டுகளாக தொகுதியில் களப்பணியாற்றி வந்தார். சமீபத்தில் மதுரை சுற்றுச்சாலையில் 150 அடி உயர வ.உ.சி சிலை அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழாவை கார்த்தி முன்னின்று நடத்தினார்.அந்தவிழாவில் இயக்குநர் சுந்தர்.சியும் பங்கேற்றார்.
இந்தநிலையில் மதுரை மத்திய தொகுதியில் தானே வேட்பாளராக அறிவிக்கப்படுவோம் என வி.எஸ்.கார்த்தி எதிர்பார்த்திருந்தார். ஆனால், அவரை ஒதுக்கிவிட்டு இயக்குநர் சுந்தர்.சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் கட்சியை விட்டே விலகியிருக்கிறார் கார்த்தி. இவரைத் தொடர்ந்து இவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சிப் பதவிகளிலிருந்து விலகினர்.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த புதிய நீதிக் கட்சி நிர்வாகிகள் ஊடகங்களிடம் கூறியதாவது…
வ.உ.சி சிலை அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழாவுக்குப் பிறகு மதுரையில் பிரதமர் மோடியை ஏ.சி.சண்முகத்துடன் சென்று கார்த்தியும் சந்தித்தார்.அப்போது அவரை மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் என பிரதமரிடம் ஏ.சி.சண்முகம் அறிமுகம் செய்து வைத்தார்.கார்த்தி பெயர்தான் வேட்பாளர் பட்டியலில் முதலில் இருந்தது.ஆனால் திடீரென சுந்தர்.சி வேட்பாராக அறிவிக்கப்பட்டதை கார்த்தி தரப்பினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதனால் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.இது சுந்தர்.சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றனர்.
ஏற்கெனவே அதிமுகவினர் சுந்தர்.சி இந்தத் தொகுதியின் வேட்பாளரானதை விரும்பாமல் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் இப்போது புதிய நீதிக் கட்சியினரும் எதிர்த்திருப்பது அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
இதனால் சுந்தர்.சி பெரும் கலக்கமடைந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.


