பெருந்தமிழர் தொ.பரமசிவன் மறைவு – அரசு மரியாதை செய்ய சீமான் வேண்டுகோள்

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் உடல்நலக் குறைவால் நேன்று காலமானார். அவருக்கு வயது 70.

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் பேராசிரியர் தொ.பரமசிவன் தவிர்க்க முடியாத பெயர். நாட்டார் வழக்காறு சார்ந்த பார்வையில் புது வெளிச்சம் பாய்ச்சியவர். வெகுமக்கள் வழக்காறுகள் மற்றும் நம்பிக்கைகள், சடங்குகள் சார்ந்தவை இவரது ஆய்வுகள். ‘திராவிடம்’ எனும் சிந்தனை எப்படித் தமிழ் மண்ணில் உருக்கொண்டது, அதற்கான வரலாற்று – பண்பாட்டுப் பின்னணி என்ன என்று ஆதாரப்பூர்வமாக நிலைநாட்டியவர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1950 ஆம் ஆண்டு பிறந்த தொ.பரமசிவன், செயின்ட் சேவியர் கல்லூரியிலும், காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும் தமிழ் பயின்றார். தமிழ்ப் பேராசிரியராகப் பணி வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரியிலும், மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் பணியாற்றினார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக 9 ஆண்டுகள் பணியாற்றினார்.

சிறுவயதில் தன் தாய் இலட்சுமி அம்மாளிடம் பல வாழ்க்கைச் சம்பவங்களைக் கதைகளாகக் கேட்டதுதான் தனது பிற்காலப் பேச்சுவழி ஆய்வுகளுக்குக் காரணமாக இருப்பதாகத் தெரிவித்தார். வரலாறு என்பது காலந்தோறும் மேட்டிமைச் சமுதாயங்களின் பார்வையிலிருந்தே பதிவுசெய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்தப் போக்கிலிருந்து மாறுபட்டு, புறக்கணிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு தன் ஆய்வுகளை மேற்கொண்டவர். இதற்காக இவருடைய கருத்தியல் தளத்தை மனித வாசிப்பு சார்ந்து அமைத்துக்கொண்டார்.

‘அறியப்படாத தமிழகம்’, ‘அழகர் கோயில்’, ‘பண்பாட்டு அசைவுகள்’ போன்ற இவரது நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றவை. ‘வழித்தடங்கள்’, ‘சமயங்களின் அரசியல்’, ‘விடுபூக்கள்’, ‘உரைகல்’, ‘மானுட வாசிப்பு’, ‘மஞ்சள் மகிமை’, ‘மரபும் புதுமையும்’ உள்ளிட்ட பல நூல்களை தொ.பரமசிவன் எழுதியுள்ளார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,நேற்று (டிசம்பர் 24,2020) இரவு சுமார் 8 மணி அளவில் உயிரிழந்தார்.

தொ.பரமசிவன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களது மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கும் ‌மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமானப் பேரிழப்பு என்று சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,

முதுபெரும் தமிழறிஞரும், மகத்தான வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வாளருமான எனது பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், மற்றும் உறவுகள் துயரில் நானும் ஒருவனாய்ப் பங்கெடுக்கிறேன்.

எளிய கிராமத்தில் பிறந்த என்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்குக் கல்வியை மட்டுமல்லாது, தமிழுணர்வையும், மானுடச்சிந்தனையையும், சமூகப்பார்வையையும் அளித்த மகத்தான மாமனிதராவார். சமயங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்து அவர் நிகழ்த்தியிருக்கிற ஆய்வுகள் தமிழின அறிவுலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன.

தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடிக் கண்டறிந்து ஆவணப்படுத்தி அவர் எழுதி இருக்கின்ற அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற பல நூல்கள் தமிழினத்திற்கு அவர் வழங்கி இருக்கின்ற மகத்தான பெருங்கொடைகளாகும்.

இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக அவர் பணிபுரிந்த போது அவருடைய மாணவனாகப் பயின்ற அனுபவங்கள் மறக்க முடியாதவை. அவரால்தான் நான் உருவானேன். என் பேச்சில், என் எழுத்தில் என என் வாழ்வின் சகல விதத்திலும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய எனது பேராசிரியர் மறைந்துவிட்டார் எனும் செய்தி ஏற்கவே முடியாத பெருந்துயரமாக மாறி, என்னை வாட்டுகிறது.

நாம் தமிழர் என்கின்ற பெரும்படையை நாங்கள் கட்டியெழுப்பியபோது எங்களுக்கு வகுப்பெடுத்து வழிகாட்டிய பெருந்தகை அவர். மதுரை தியாகராயர் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி எண்ணற்ற அறிஞர்களை, ஆய்வாளர்களை உருவாக்கிய பேரறிஞராவார்.

கடினமான ஆய்வு நூல்களைக்கூட எளிய தமிழில் சொல்லக்கூடிய அவரைப் போன்ற ஒரு மகத்தான எழுத்தாளுமை யாரும் இல்லை.

அவருடைய இழப்புத் தனிப்பட்ட அளவில் என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இன்றளவும் எனக்கு வழிகாட்டிக்கொண்டிருந்த ஒரு ஒளி அணைந்து விட்டதே? என்று கலங்கி நிற்கும் வேளையிலும் அவர் நம்மிடம் விட்டுச்சென்றுள்ள காலத்தால் அழியாத அவரது ஆய்வு நூல்களும் அவர் கற்பித்த பாடங்களும் இன்னும் பல தலைமுறைகளுக்குத் தமிழினத்தை வழிநடத்திச்செல்லும் என்ற பேருண்மை நம்பிக்கையுடன் மீண்டெழ வைக்கிறது.

ஐயாவின் மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கும் ‌மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்குமான பேரிழப்பாகும். உரிய அரசு மரியாதையோடு ஐயாவின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

பெருந்தமிழர் நமது ஐயா தொ.பரமசிவன் அவர்களின் பெயர் தமிழினம் உள்ளவரை, தமிழ்மொழி வாழும் வரை மங்காத அறிவுப்பேரொளியாகச் சுடர்விடும். என் விழி முழுவதும் நிறைந்திருக்கின்ற கண்ணீரோடு என் பேராசிரியரின் பேரன்பிற்கு நன்றிப்பெருக்கோடு புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் அவர்கள் கூறியுள்ளார்.

Leave a Response