பாஜக அரசின் ஆணவத்துக்கு சம்மட்டி அடி – உச்சநீதிமன்றத்தீர்ப்பு விவரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுடன் ஆளுநர் ஆர்.என்.இரவி தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருகிறார். இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.இரவியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிஷேக் மனு சிங்வி, வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் வாதத்தில்,‘‘ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பிறகு அதற்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்று அரசியல் சாசன பிரிவு 200 கூறுகிறது. மசோதாக்களை நிறுத்தி வைக்கும் வகையில் நான்காவதாக முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்ற ஒன்றிய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். அப்படி அரசியல் சாசனம் கூறவில்லை என முந்தைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக தெரிவித்துள்ளது. குறிப்பாக அமைச்சரவை முடிவின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும். அப்படித் தான் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனிப்பட்ட எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.

குறிப்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் உத்தரவை இரத்து செய்ய வேண்டும். மேலும் இந்த விவகாரங்களில் அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் செயல்படாததால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பத்து பல்கலைக்கழக மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தாமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து ஆளுநர் தரப்பில் ஆஜரான ஒன்றிய அரசின் அட்டெர்னி ஜெனரல் ஆர்.வெங்கெட்ரமணி, ‘‘இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் ஆளுநருக்கு என்று தனிப்பட்ட அதிகாரம் உண்டு. குறிப்பாக அரசியல் சாசன பிரிவு 200ல் குறிப்பிடப்பட்டுள்ள விருப்புரிமை என்ற வார்த்தை ஆளுநருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தைப் பிரதிபலிக்கிறது. அதன் அடிப்படையில் சட்டப்பேரவையின் நடவடிக்கையின் படி ஆளுநர் செயல்பட வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால், அந்த மசோதா செயலிழந்து விட்டது என்று தான் அர்த்தம். அதற்கு என்று தனிப்பட்ட முறையில் விளக்கம் அளிக்கத் தேவையில்லை. அதேபோன்று காலாவதியான மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், அதற்கு மீண்டும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. இருப்பினும் அதுபோன்ற மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். அதற்கான அரசியல் சாசன அதிகாரம் ஆளுநருக்கு உண்டு.

ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்துவிட்டால் அரசியல் சாசன பிரிவு 200ன் செயல்பாடு என்பது முடிந்து விட்டது ஆகும். இதையடுத்து குறிப்பிட்ட அந்த மசோதா விவகாரத்தில் குடியரசுத் தலைவர் அதிகாரமான அரசியல் சாசன பிரிவு 201 செயல்பாட்டுக்கு அது வந்துவிடும். இதில் குடியரசுத் தலைவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அதனை நிறுத்தி வைக்கிறார் என்று வைத்துக் கொண்டால், அது அரசியல் சாசன பிரிவு 254ன் படி மாநில சட்டம் என்பது ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராகவோ அல்லது முரணாகவோ இருக்கிறது என்று அர்த்தமாகும் என்று தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பு வாதங்க்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி ஒத்திவைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது….

ஆளுநர் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 200 இன்படி செயல்பட வேண்டும். ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா மாநிலத்தின் சட்டபேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2 ஆவது முறையாக தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அனுப்பி வைத்தது சட்டவிரோதம் ஆகும்.

மேலும் குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை அனுப்பி வைப்பதற்கு முன்னதாக தனக்கான அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தி இருக்க வேண்டும். எந்தவித காரணங்களையும் கூறாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்தது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமில்லாமல், அது தவறான ஒன்றாகும். அதேபோன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் கிடையாது என்பதை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. இதுகுறித்து பஞ்சாப் மாநில வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவை அனுப்பி வைக்கும் மசோதாக்களின் மீது அரசியல் சாசனம் வழங்காத அதிகாரங்களை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர் அதிகப்படியாக மூன்று மாதத்தில் மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். கூடிய விரைவில் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆளுநர் செயல்படக் கூடாது.

குறிப்பாக தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட பத்து மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.இரவி அனுப்பி வைத்தது என்பது சட்டவிரோதம் என்பது மட்டுமில்லாமல், அது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். குறிப்பாக ஆளுநருக்கு என்று வீட்டோ என்ற தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்பதை அவர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஆளுநர் என்பவர் மாநில அரசின் கொள்கை மற்றும் சட்டப்பேரவை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆவார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவை அறிவுரையின்படி மட்டும் தான் மாநில ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாகச் செயல்பட அவருக்கு அதிகாரம் கிடையாது.

மேலும் மசோதா மீண்டும் அதாவது இரண்டாவது முறையாக சட்டப்பேரவை மூலம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு அன்றைய தினமே ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். தமிழ்நாடு சட்டப்பேரவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.இரவியின் செயல்பாடுகள் ஏற்புடையது கிடையாது. ஆளுநர் ஆர்.என்.இரவி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உள்ளார்.

குறிப்பாக மசோதாக்களின் சாராம்சம் முழுமையாக மாற்றப்பட்டு இருந்தாலோ அல்லது அதில் குளறுபடிகள் இருந்தாலும் அதுகுறித்து ஆளுநர் என்பவர் அரசின் விவரங்களைக் கேட்டு ஆலோசிக்க வேண்டும். அதில் திருப்தி இல்லை என்றால் மட்டும் தான் குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை ஆளுநர் அனுப்பி வைக்க முடியும். ஆனால் இந்த விவகாரத்தில் அதுபோன்ற செயல்பாடுகள் எதுவும் இல்லை என்பது வழக்கின் விசாரணையின் போது தெளிவாகியது.

குறிப்பாக சட்டப்பேரவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநர் எந்த வகையிலும் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. அப்படி நடக்கும் பட்சத்தில் அதனைக் கண்டிப்பாக ஏற்க முடியாது. ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். மாநில அரசோடு இணைந்து தான் அவர் செயல்பட்டு நடக்க வேண்டும். எனவே தமிழ்நாடு சட்டப்பேரவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பத்து மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.இரவியின் அனைத்து நடவடிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் இரத்து செய்கிறது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரமான அரசியல் சாசன விதி 142 ஐ பயன்படுத்தி ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது. அதில், ‘‘தமிழ்நாடு சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது எந்தவித முடிவும் எடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.இரவி தாமதப்படுத்தியது அல்லது செயல்படாமல் இருந்ததை உச்ச நீதிமன்றம் மிகவும் கண்டிக்கிறது. இதில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காத போதிலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி குறிப்பாக பிரிவு 200இன் கீழ், சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பின்னர் ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுக்க முடியாது என்ற விதியின் அடிப்படையில், குறிப்பிட்ட பத்து மசோதாக்களுக்கும் ஆளுநர் முறையாக ஒப்புதல் வழங்கி விட்டது போன்றதாகக் கருதப்படும் என்றும், அதனால் அந்த மசோதாக்கள் அனைத்தும் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேறியதாக அர்த்தம் கொள்ளப்படும். இருப்பினும் இதே விவகாரத்தில் வேறு கோரிக்கை கொண்ட அதாவது பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர் நியமனம் தொடர்பான வழக்கு மட்டும் தனியாக உச்ச நீதிமன்றத்தின் தரப்பில் விசாரிக்கப்படும்.

ஆளுநருக்கு என்று தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்பு என்று இருக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு அவர் செயல்பட வேண்டும். அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் அவர் செயல்பட முடியும். இந்த விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைகளில் நேர்மை இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. அவர் தான் எடுத்த பதவிப்பிரமாணத்தின்படி செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அது தற்போது கேள்வியாக உள்ளது. தனக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி செயல்பட ஆளுநர் ஆர்.என்.இரவி தவறி விட்டார்.

ஆளுநருக்கு அரசியல் சாசன பிரிவு 200 இன் கீழ் மூன்று வாய்ப்புகள் மட்டும் தான் இருக்கிறது. அதாவது முதலில் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது மசோதாவை நிறுத்தி வைப்பது, மூன்றாவது அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது. இதைத்தவிர்த்து அவர் நீண்ட காலமாக மசோதாக்களை கிடப்பில் போட்டு தனிப்பட்ட முறையில் செயல்பட முடியாது.மேலும் மசோதா விவகாரத்தை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு என்று தன்னிச்சையாக ஒதுக்க முடியாது. குறிப்பாக அரசியல் சாசன பிரிவு 200 அல்லது 31ஏ, 31சி ஆகியவை மசோதா விவகாரம் போன்றவற்றில் இரண்டாவது நிபந்தனையாகும். அங்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் நிபந்தனை என்பது முன்னோடியாகும்.

சட்டப்பேரவை மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பத்து மசோதாக்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி எடுத்த நடவடிக்கை முழுமையான விதிமுறை மீறல் என்பது மட்டுமல்லாமல், மிகப்பெரிய பிழையானதாகும். இப்படி வெளிப்படையான முறையில் கூறுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என்பதுதான் உண்மையாகும். அதாவது ஒரு மாநில ஆளுநர் என்பவர் விழிப்புடன் இருக்க வேண்டுமே தவிர, அரசுக்குத் தடையை ஏற்படுத்துபவராக இருக்கக் கூடாது.

‘‘ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மிக மோசமானதாகவே இருக்கும்’’ என்று அம்பேத்கர் சொல்லியிருக்கிறார்,

மாநில சட்டப்பேரவையின் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது அல்லது நிறுத்தி வைத்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆளுநர் முடிவெடுத்து நடவடிக்கை மேற்கொண்டால், அதுகுறித்து ஒரு மாதத்திற்குள் அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். இல்லையென்றால் அரசால் அனுப்பிவைக்கப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் முரண்படுகிறார் என்றாலோ அல்லது மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தாலோ, மசோதாக்கள் சட்டப்பேரவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். அதை விடுத்து தனிப்பட்ட முறையில் மசோதாக்களை ஆண்டு கணக்கில் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்க முடியாது.

இவ்வாறு அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் மூலம் காலக்கெடு விதிக்கப்பட்டது இந்திய ஒன்றிய வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தீர்ப்பு,ஆளுநர்களை கைப்பாவையாக வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அடாவடி செய்து வரும் ஒன்றிய பாஜகவின் செயலுக்குக் கிடைத்த சம்மட்டி அடி என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response