63 ஆண்டுகளாகத் தொடர்ந்த சிக்கல் – அதிரடி முடிவெடுத்த மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளன. வழக்கமாக நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்னதாக,நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடுகள், புதிய திட்டங்களுக்கான ஒப்புதல் ஆகியன அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்படும்.

அந்த வகையில், வரும் நிதியாண்டுக்கு தற்போதைய திமுக அரசு 5 ஆவது மற்றும் முழுமையான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது. அதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்ச மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

ஒரு மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் கூறியதாவது….

சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’ என கூறப்படும் 32 கி.மீ. பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடிய காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். இது முதலமைச்சரின் கவனத்துக்குச் சென்றதன் விளைவாக, அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மக்களுக்கு பட்டா வழங்க முடிவெடுத்துள்ளார்.

இதில் சென்னையில் மட்டும், ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் 29,187 பேர் பட்டா இல்லாமல் குடியிருக்கின்றனர். அவர்களுக்கு பட்டா வழங்கும் பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளார். இந்த பெல்ட் ஏரியா சட்டம் 1962 ஆம் ஆண்டு வந்தது. 1962 இலிருந்து 2025 வரை அதன் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இவர்களுக்கு 6 மாதத்துக்குள் பட்டா வழங்க உத்தரவிட்டதுடன், மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்தப் பணிகளை துவங்கவும் அறிவுறுத்தியுள்ளார். சென்னையை சுற்றியிருக்கக்கூடிய 4 மாவட்ட மக்களுக்கும், மிகப் பெரிய வரப்பிரசாதமாக இது அமையவிருக்கிறது.

மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளில் இதே போல பிரச்சனையிருக்கிறது. அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கெல்லாம் சேர்ந்து மொத்தம் 57,084 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க அறிவறுத்தியுள்ளார். ஏறத்தாழ 86 ஆயிரம் பேருக்கு பட்டாவை 6 மாதங்களுக்குள் வழங்கும்படி கூறியுள்ளார். இவர்கள் தவிர்த்து, இன்னும் விடுபட்டிருந்து மனுக்கள் வரும் என்று சொன்னால், அதையும் பரிசீலனை செய்யுங்கள் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்த பின் இதுவரை 10.26 இலட்சம் பேருக்கு நாங்கள் பட்டா வழஙகியுள்ளோம்.அதை இன்னும் கொஞ்சம் விரைவுபடுத்தி வரும் ஆறு மாதத்துக்குள் 6.29 இலட்சம் பேருக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். ஒரு தனி மனிதனுக்கு குடியிருப்பதற்கு இடமோ, வீடோ இல்லாமல் இருக்கக் கூடாது என்ற உணர்வுடன் முதலமைச்சர் ஒவ்வொரு காரியத்தையும் செய்து வருகிறார். இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பெல்ட் ஏரியாவிற்கு எடுக்கப்பட்ட முடிவு அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய முடிவாக இருக்கும்.

நீர்நிலை புறம்போக்கு, மேய்க்கால் நிலம் போன்ற ஆட்சேபத்துக்குரிய இடங்களில் பட்டா வழங்கப்படாது. நீதிமன்றமே தடை விதித்துள்ளது. அதேநேரம் அரசால் வழங்க முடிவெடுக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படுகிறது. இதுகுறித்து, நாங்களே கணக்கெடுத்துள்ளோம். அங்கு வசிக்கும் மக்களுக்கும் தெரியும். ஒருவேளை விடுபட்டிருக்கும் பட்சத்தில் விண்ணப்பித்தால், அதற்கான குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response