குஜராத் மாநிலம் சூரத் தொகுதி சிக்கல் – காங்கிரசு கண்டனம்

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு ஒரே கட்டமாக மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் ஆளும்பாஜகவுக்கு எதிராக காங்கிரசு ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. 26 தொகுதிகளில் 24 தொகுதிகளில் காங்கிரசு வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. பாவ்நகர், பாருச் தொகுதிகளில் ஆம் ஆத்மி களம் காண்கிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு தேர்தல் ஆணையத்தால் வெற்றிச் சான்றிதழும் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த காங்கிரசு வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த சுயேச்சைகள் உள்பட 8 வேட்பாளர்களும் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனையடுத்து, முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது.

வேட்புமனு நிராகரிப்புக்குக் காரணம் என்ன? –

காங்கிரசு வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவை மூவர் முன்மொழிந்திருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருக்க, அந்த மூவரும் மாவட்டத் தேர்தல் அதிகாரியரிடம் அதில் இடம்பெற்றிருக்கும் கையெழுத்து தங்களுடையது அல்ல எனக் கூறினராம். இதனையடுத்து போலி கையெழுத்து குற்றத்துக்காக வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அலுவலர் சவுரப் பார்தி அறிவித்திருந்தார்.

இதனால், சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். சூரத் தொகுதியில் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வானதால் எஞ்சியுள்ள தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறும்.

காங்கிரசுக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக சூதாட்டம் நிகழ்த்தியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். 1984-ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தல்களில் சூரத், காங்கிரசின் வெற்றித் தொகுதியாக இருந்துள்ளது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நமது தேர்தல்கள், ஜனநாயகம், பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியல் சாசனம் என அனைத்துமே அச்சுறுத்தலின் கீழ் உள்ளன. இதுதான் நம் வாழ்நாளின் மிக முக்கியமான தேர்தல் என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் காங்கிரசு வழக்கறிஞர், ‘இந்தத் தேர்தல் வெற்றிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடுவோம் அங்கு நீதி கிடைக்கவில்லையெனில் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Response