சீமான் மீது அவதூறு வழக்கு – இரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது, தமிழக அரசின் அதிகாரம் மற்றும் முதல்வர் குறித்தும் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்தப் பேட்டி அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாகக் கூறி சீமான் மீது முதல்வர் பழனிச்சாமி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை இரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் வழக்குத் தொடர்ந்தார்.

முதல்வர் பழனிச்சாமியைப் பற்றி தனிபட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை. பொது வாழ்க்கையில் அவரது பணி தொடர்பான நடவடிக்கைகள்தான் விமர்சனம் செய்யப்பட்டது. வழக்கு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில்தான் பேசப்பட்டது. அதனால் வழக்கை இரத்து செய்யவேண்டும் என்று சீமான் தரப்பில் வாதிடப்பட்டது.

முதல்வர் குறித்து சீமான் கடுமையான வார்த்தைகள் கொண்டு அவதூறாகப் பேசியுள்ளதால், வழக்கை இரத்து செய்யக்கூடாது என அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவதூறு வழக்கை இரத்து செய்யக் கோரும் சீமானின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Response