எந்த மாநிலத்துக்கும் ஆளுநர் உரை தேவையில்லை – மு.க.ஸ்டாலின் அதிரடி முன்னெடுப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது.ஆண்டின் தொடக்கக் கூட்டத்தில் ஆளுநர் உரை இருக்கவேண்டும் என்கிற மரபுப்படி ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆளுநர் ஆர்.என்.இரவி உரையை வாசிக்காமல் அவைக்கு வந்த 17 நிமிடங்களில் அங்கிருந்து வெளியேறினார்.

இதைக் கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தார்.

அப்போது அவர் ஆற்றிய உரை….

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமுறை ஆளுநர் சட்ட விதிகளையும்,மரபுகளையும் மீறி செயல்பட்டு அவையிலிருந்து வெளியே சென்றுள்ளார்.வெளியே என்று சொல்வதைவிட, வெளியேறிச் சென்றிருக்கிறார்.

ஆளுநரின் செயல் அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு அழகல்ல.இந்திய அரசமைப்புச் சட்டம் article 176-ன்படி, ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநரால் முழுமையாகப் படிக்கப்படவேண்டிய ஒன்றாகும். இதில் ஆளுநர் தனது சொந்தக் கருத்துகளைத் தெரிவிப்பதற்கோ, மாநில அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையில் நீக்கம் செய்வதற்கோ அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை.

அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் உரை குறித்து தெரிவிக்கும் Article 176-ல், தெளிவுரைகளைக் கேட்பதற்கு வழிவகை செய்யப்படவில்லை.இருப்பினும் நாம் அவர் அவ்வாறு சில விளக்கங்களைக் குறிப்பிட்டு அரசுக்கு நேற்று கடிதம் எழுதியதைத் தொடர்ந்து அவருக்கு அதற்கான பதிலும் அளிக்கப்பட்டது.இந்தநிலையில் ஆளுநர் வேண்டுமென்றே அரசமைப்புச் சட்டத்தை மீறிய ஒரு செயலைச் செய்துள்ளார்.

ஆளுநரின் செயல் என்பது நூற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட இந்த மக்கள் சபையை,அதன் மாட்சிமையை அவமதிக்கும் செயலாகும் என்றே நான் கருதுகிறேன்.

ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்பதை விலக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். ஆளுநர் உரையை விலக்கும் நடைமுறையை கொண்டு வர அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்தியா முழுவதும் இந்த நடைமுறையை அமலுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.ஆளுநர் உரையை படிக்காதது ஒருநாள் செய்தியாக இதைக் கடந்துவிட முடியாது.ஆளுநர் சொந்தக் கருத்தைத் தெரிவிக்க உரிமை இல்லை.ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்பதை விலக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்.

10-4-2023 அன்று இதே பேரவையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கே நான் நினைவுகூர விரும்புகிறேன்.

“ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை” என்று அண்ணா கூறியபோதிலும்,அதை கலைஞர் வழிமொழிந்தபோதிலும், அந்தப்பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை.அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை.இந்த அரசும் தவறியதில்லை.” என்று அன்றைக்கு நான் எடுத்துரைத்தேன்.

அந்தக் கொள்கையையொட்டியே நான் ஆளுநர் உரை நிகழ்த்த வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க ஆணையிட்டேன்.

எனினும், ஆளுநர் ஏற்கெனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் இன்று செயல்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. தமிழ்நாடு சட்டமன்றம், எட்டரைக் கோடி தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற மாமன்றம். ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராக, உண்மையைப் பேசுபவராக இருக்கவேண்டும்.மக்களுடைய பேராதரவோடு, பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள அரசு எடுக்கின்ற முடிவுகளுக்கு ஒத்துழைப்பவராக இருக்கவேண்டும்.

அதைத்தான் அரசமைப்புச் சட்டமும் அந்தப் பதவி வகிப்பவரிடம் இருந்து எதிர்பார்க்கிறது.ஆனால் நம்முடைய ஆளுநர் அவர்கள் அதற்கு மாறாகச் செயல்படுகிறார்.மாநில நிர்வாகத்தை முடக்கவும்,பொதுமேடைகளில் அரசியல் பேசியும் அவதூறு பரப்பிவருகிறார்.அது அவரது சொந்த விருப்பம் என்று கருதலாம்.

எனினும்,அத்தகைய ஒரு முயற்சியை இங்கும் செய்ய அவர் முனைவது ஏற்புடையதல்ல.நூற்றாண்டு விழா கொண்டாடி,சீரோடும்,சிறப்போடும் இயங்குகின்ற இப்பேரவையின் புகழ் மங்கிடாத வகையில் பாதுகாத்து வந்த சான்றோர்களின் வழித்தடத்தினைப் பின்பற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

வரலாற்றுப் பெருமை கொண்ட இப்பேரவையின் மாண்பினைப் பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ள காரணத்தால்,கீழ்க்காணும் தீர்மானத்தை பேரவைத் தலைவரின் இசைவோடு, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, முன்மொழிந்திட அனுமதி கோருகிறேன் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் அந்தத் தீர்மானத்துக்கு அனுமதி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தில்….

ஏற்கெனவே உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி,தமிழ்நாடு அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையைப் பேரவையில் படிக்காமல் ஆளுநர் சென்றுள்ளதை இப்பேரவை ஏற்கவில்லை.ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட,சட்டமன்ற உறுப்பினர்களின் மேசையில் உள்ள கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆளுநர்உரையின் ஆங்கில மொழியாக்கம் இங்கே ஆளுநரால் படிக்கப்பட்டதாக இப்பேரவை கருதுகிறது.அவ்வாறே அவைக்குறிப்பில் நடவடிக்கைக் குறிப்புகள் இடம்பெறலாம்.

மேலும்,மரபுவழி நிகழ்வுகள்,பேரவைத் தலைவரால் படிக்கப்பெறவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழிகின்ற தீர்மானம்,அதன் முடிவு ஆகியவை மட்டும் பேரவை நடவடிக்கைக் குறிப்பில் இடம்பெறலாம் என்னும் தீர்மானத்தை மொழிகிறேன்.இந்தத் தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுகிறேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Response