ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்குதேசம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. சுமார் 2 மணி நேரம் நடந்த கூட்டத்தில் அமைச்சர் நாராலோகேஷ் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக லால்கிருஷ்ண தேவராயலு தேர்வு செய்யப்பட்டார். நந்தியாலா நாடாளுமன்றத் தொகுதியில் முதல்முறையாக வெற்றி பெற்ற பைரெட்டி சபரிக்கு துணைத்தலைவராக வாய்ப்பு அளிக்கப்பட்டது. பொருளாளராக டகுமல்ல பிரசாத் நியமிக்கப்பட்டார்.
24 ஆம் தேதி(இன்று) தொடங்க உள்ள மக்களவை கூட்டத்தொடரில் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை மற்றும் அவையில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் சந்திரபாபுநாயுடு பேசியதாவது…
மக்களவை சபாநாயகர் தேர்தலுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்து போன் வந்தது. போனில் சபாநாயகர் தேர்தல் குறித்து அமித்ஷா என்னிடம் பேசினார். ஆனால் நான், தெலுங்கு தேசம் கட்சிக்கு சபாநாயகர் பதவி தேவையில்லை. அரசுக்கு நிதி மட்டுமே வேண்டும் என்று கூறினேன். மாநிலம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல உதவிகளைக் கேட்டேன். ஆந்திர மக்கள் கூட்டணியை நம்பி ஆட்சியை கொடுத்ததாகக் கூறினேன். மேலும் பதவி கேட்டால் மாநில நலன்கள் பாதிக்கப்படும். மாநில நலன்களே நமக்கு முக்கியம்.
ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 3 துறைகளை ஒதுக்குகிறேன்.அந்தந்த துறைகளில் உள்ள நிதி மற்றும் திட்டங்களை மாநிலத்திற்குக் கொண்டு வர வேண்டும். துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசி ஒருங்கிணைக்க வேண்டும். மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 உறுப்பினர்கள் பலம் இருப்பதால், மாநிலத்துக்குக் கூடுதல் நிதி கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும். முக்கியமாக போலாவரம், அமராவதி கட்டுமானப்பணிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க நிதிப் பங்களிப்பைக் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தப் பேச்சில், மேலும் பதவி கேட்டால் மாநில நலன்கள் பாதிக்கப்படும் என்று அவர் கூறியிருப்பதன் மூலம்,சபாநாயகர் பதவி கேட்டால் நீங்கள் கேட்கும் நிதி தரமாட்டோம் என்று அமித்ஷா மிரட்டியதாவும் அதற்கு சந்திரபாபு பணிந்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.