சென்னை மக்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் புள்ளிவிவரம்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வசிக்கும் மக்கள், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் மழையால் ஏற்படும் வெள்ளத்தாலும், மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்படும் தண்ணீர் பஞ்சத்தாலும் பாதிக்கப்படுவார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வருகிறது.

அதேபோல், இந்த ஆண்டும் மழையால் சென்னையில் சில இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்தப் பகுதி மக்கள் சிரமப்பட்டனர்.

இது ஒரு புறம் இருக்க தொடர் மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகள் முழுக்கொள்ளளவையும் எட்டி இருக்கின்றன. இதன் காரணமாக வருகிற கோடைக்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்க வாய்ப்பில்லை என்ற இனிப்பான செய்தியை அவ்வப்போது சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு நல்ல செய்தியையும் சென்னை குடிநீர் வாரியம் கூறி இருக்கிறது.

சென்னையில் ஒரே மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுதான் அந்த நல்ல செய்தி.

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, ஆலந்தூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம், பெருங்குடி, அடையார், சோழிங்கநல்லூர் ஆகிய 15 மண்டலங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் ‘கிடுகிடு’வென உயர்ந்து இருப்பதைப் புள்ளி விவரங்களுடன் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, கடந்த அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 2.66 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் 0.54 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருக்கிறது.

ஏற்கனவே சென்னைக்கு தண்ணீர்ப் பஞ்சம் இருக்காது என்று கூறி வரும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், தற்போது சென்னையின் 15 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பதால் வீடுகளில் ஆழ்துளையிட்டு அத்தியாவசிய தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கின்றனர். இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response