ம.பி ராஜஸ்தானைத் தொடர்ந்து மகாராஷ்டிரா அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி

கொரோனா ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் மத்தியபிரதேசத்தில் காங்கிரசு ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சிக்கு வந்தது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரசு ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது பாஜக.

இவற்றைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் சிவசேனா – காங்கிரசு கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளது.

இதை மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார். அவர் தனது 60 ஆவது பிறந்தநாளையொட்டி சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது….

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரசு, காங்கிரசுக் கட்சிகள் நேர்மறையானவை. 3 கட்சிகளின் அனுபவத்தில் இந்த அரசு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

எனது தலைமையிலான அரசாங்கத்தின் எதிர்காலம் எதிர்க்கட்சிகளின் கைகளில் இல்லை. இந்தக் கூட்டணி அரசு முச்சக்கர வண்டி(ஆட்டோ). இது ஏழைகளுக்கான வாகனம். அதன் ஸ்டீயரிங் என் கைகளில் உள்ளது. மற்ற இருவரும் (தேசியவாத காங்கிரசு, காங்கிரசு) பின்னால் அமர்ந்து இருக்கிறார்கள்.

உங்களுக்கு (எதிர்க்கட்சியான பா.ஜனதா) இந்த அரசைக் கவிழ்ப்பதில் இன்பம் கிடைத்தால் இப்போதே கவிழ்த்து விடுங்கள். ஊகிக்கப்படுவது போல் செப்டம்பர், அக்டோபர் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? சிலர் ஆக்கப்பூர்வமான பணியை செய்வதில் இன்பம் அடைகிறார்கள். ஆனால் சிலர் அழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மகா விகாஷ் அகாடி கூட்டணி ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது என்று கூறுகிறீர்கள். ஆனால் அதை நீங்கள் கவிழ்த்தால் அது ஜனநாயகமாகி விடுமா? நான் கொள்கையில் இருந்து பிறழவில்லை. ஒரு கூட்டணியில் தான் சேர்ந்து இருக்கிறேன்.

இந்த கூட்டணி அரசில் காங்கிரசு புறக்கணிக்கப்படுவதாக உண்டான பிரச்சினை அக்கட்சி தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின் தீர்க்கப்பட்டது. சரத்பவாருடன் எனக்கு நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. நான் காங்கிரசு தலைவர் சோனியா காந்தியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தப்பேட்டி மூலம் மகாராஷ்டிரா ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக இறங்கியிருப்பது வெளிப்படையாகியுள்ளது.

Leave a Response