இளமதி செல்வன் வழக்கு அமைச்சர் தலையீட்டால் திசைமாறியது – திவிக குற்றச்சாட்டு

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் செல்வம் (வயது 25). பி.எஸ்சி. பட்டதாரி. பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களது மகள் இளமதி (23). பி.காம். பட்டதாரி.

பவானி அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் செல்வமும், இளமதியும் வேலை பார்த்தார்கள். அப்போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து இருவரும் சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த காலாண்டியூர் வந்து திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி ஈஸ்வரன் என்பவரிடம் தஞ்சம் அடைந்து திருமணம் செய்து கொண்டனர்.

இதை அறிந்த இளமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காலாண்டியூர் சென்று திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனையும், இளமதியின் காதலன் செல்வத்தையும் தாக்கினர். அங்கிருந்து இளமதியை அழைத்துச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரனும், செல்வமும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுதொடர்பாக இளமதியின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 18 பேரை கொளத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆனால், இளமதி எங்கே உள்ளார்? என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் தகவல் பரவியது. இதற்கிடையே தனது மனைவியை மீட்டுத் தரும்படி செல்வம் கொளத்தூர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் இளமதி மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குரைஞருடன் ஆஜரானார். இது பற்றி தகவல் அறிந்ததும் பாட்டாளி மக்கள் கட்சியினர், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் காவல்நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காவல் நிலையத்தில் ஆஜரான இளம்பெண் இளமதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
இரவு 8.30 மணி வரை நடந்த விசாரணைக்குப் பிறகு, இளமதியை அவரது தாயாருடன் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கலப்புத் திருமணம் செய்ததாகக் கூறப்பட்ட இளமதி திடீரென்று மாயமானார். அவர் இன்று (நேற்று) காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது பெற்றோருடன் செல்வதாகக் கூறினார். இதைத்தொடர்ந்து அவரது தாயாருடன் அனுப்பி வைத்தோம் என்றனர்.

இந்தநிலையில் சாந்தி, பவானி காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ’என்னுடைய மகள் எங்கும் செல்லவில்லை. மாயமாகவும் இல்லை. என்னுடன்தான் இருக்கிறார். ஆனால் பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். மேலும் கடந்த 9 ஆம் தேதி இவர்கள்தான் என்னிடம் கத்தியைக் காட்டி என் மகள் இளமதியை மேட்டூருக்குக் கடத்திச் சென்றார்கள்’ என்று கூறி இருந்தார். அதன்பேரில் பவானி காவல்துறையினர் நேற்று கொளத்தூர்மணி, ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சரவணபரத், செல்வம் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளமதியை அவருடைய பெற்றோர் வலுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்ற பிறகு, இளமதி எங்கே? என்கிற குறிச்சொல்லுடன் சமூகவலைதளங்களில் கேள்வி எழுந்தது. திமுக பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் இதுகுறித்து பாராளூமன்றத்தில் பேசினார்.அதன்பின்னே மேட்டூர் காவல்நிலையத்தில் இப்படி ஓர் நிகழ்வு நடந்துள்ளது.

இதுகுறித்து,இளமதி இன்னொரு திவ்யாஅல்ல.தம்பி செல்வம் இன்னொரு இளவரசனும் அல்ல.இரண்டு பேரும் நன்றாக வாழ்வார்கள்.நம்புவோம்.ஆளும் கட்சியின் அமைச்சர் தலையீடு,சாதி வெறிக் கட்சியின் கூட்டு சதி போலீசாரின் அலட்சியம் போன்ற காரணங்களால் இந்த வழக்கின் நிலை திசை மாறி இருக்கிறது என்று திராவிடர் விடுதலைக் கழகம் கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Response