ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.
இதில் முதல் கட்டத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
இதற்காக 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் கட்டத் தேர்தலில் ஒரு கோடியே 30 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். ஊராட்சித் தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 13 ஆயிரத்து 62 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். பாதுகாப்புப் பணிக்காக 63 ஆயிரம் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
இரண்டாம் கட்டத் தேர்தல் 30 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இரண்டாம் கட்டத் தேர்தலும் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை சனவரி 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.