உலகக் கோப்பை மட்டைப்பந்தாட்டத் தொடரில், இந்திய அணி வீரர் மகேந்திரசிங் தோனி, இராணுவ முத்திரை அடங்கிய கையுறையை பயன்படுத்தியிருந்தார். இதற்கு, ஐசிசி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்த தோனி, இந்திய துணை இராணுவ சிறப்புப் படையின் (Indian Para Special Forces) முத்திரை பதித்த கையுறையை அணிந்து பங்கேற்றார். இதையடுத்து இந்திய ரசிகர்கள் பலர் தோனிக்கு வாழ்த்துகளை தெரிவித்துவந்தனர்.
இந்த நிலையில் தோனியின் இந்தச் செயலுக்கு ஐசிசி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளின்படி மதம், இனம் மற்றும் அரசியல் தொடர்புடையவற்றை வெளிக்காட்டும் விதமாக களத்தில் வீரர்கள் செயல்படக்கூடாது எனச் சுட்டிக்காட்டியுள்ள ஐசிசி, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டு தோனியின் கையுறையில் உள்ள அந்த முத்திரையை நீக்குமாறு கோரியுள்ளது.
இந்திய அணியும் தோனியும் இதற்கு என்ன முடிவெடுக்கவிருக்கிறார்கள் என்பது அடுத்த போட்டி நடக்கும்போதுதான் தெரியவரும்.