சனவரி 12,2018 அன்று விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நாயகன் சூர்யா பேசியதாவது…
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக தானா சேர்ந்த கூட்டம் இருக்கும். அனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் “ தானா சேர்ந்த கூட்டத்தை “ நல்ல முறையில் கொண்டு சேர்த்துள்ளது.
இப்படத்துக்கென எதிர்பார்ப்பை,கூட்டத்தை அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அனைத்தும் தென்னிந்தியா முழுவதும் உண்டாக்கியுள்ளது. இதை நான் படத்தை விளம்பரப்படுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்தபோது தெரிந்துகொண்டேன்.
இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழுக் காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பைப் போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார்.
நானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்துத் தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.என்னைப் போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும் என்று கூறினார் சூர்யா.