
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் விசாரணைக் கைதியாக உள்ள பேரறிவாளனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் முக்கிய பகுதியைப் பதிவு செய்யத் தவறிவிட்டோம் என்று சிபிஅய் விசாரணை அதிகாரி தியாகராஜன் கூறியதன் அடிப்படையில், பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு மனுவை ஏற்றுக்கொண்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பேரறிவாளன் நிரபராதி என்பது வெளிப்படை. அவரை உடனே விடுதலை செய்ய மாநில, மத்திய அரசுகள் முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அதில்….
மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளான பேரறிவாளன் உட்பட 7 பேர், கடந்த 25ஆண்டுகளாக வெஞ்சிறையில் வாடிவருகின்றனர்.
18.2.2014 அன்று உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் விசாரணை சி.பி.அய் அதிகாரியாக பணியாற்றி பேரறிவாளனை விசாரித்த தியாகராஜன் அவர்கள் தெரிவித்த தகவல் முக்கியமானது.
ஒரு தலைப்பட்சமாக பேரறிவாளனிடம் விசாரணை நடத்தப்பட்டது உண்மை. பேரறிவாளனின் வாக்குமூலத்தின் முக்கியப் பகுதி பதிவு செய்யப்படவில்லை என்று தமக்கு ஏற்பட்ட மன உறுத்தலை சிபிஅய் அதிகாரி தியாகராஜன் செய்தியாளர்களிடம் ஒப்புக் கொண்டார்!
தன்னால் வாங்கிக்கொடுக்கப்பட்ட பேட்டரி எந்தக் காரணத்துக்காகப் பயன்படுத்தப்படப் போகிறது என்பது தனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை நாங்கள் பதிவு செய்யவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அதுபோலவே உச்சநீதிமன்றத்தில் வழக்கினை விசாரித்த ஜஸ்டிஸ் திரு.கே.டி.தாமஸ் அவர்களே ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் பல குளறுபடிகள் நடந்தன என்பதைத் தனது ஓய்வுக்குப் பின் ஒப்புக் கொண்டாரே!
அதனைத் தொடர்ந்து பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிறப்பு அனுமதி மனுவில் (Special leave petition) இந்தக் காரணங்களைக் காட்டி, தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேரறிவாளன் குற்றமற்றவர் என்பதற்கு இதைவிட ஆதாரங்கள் தேவைப்படாது. இந்த நிலையில் பேரறிவாளன் முழு விடுதலை பெறுவதற்கு முழுத் தகுதியைப் பெற்றுவிட்டார் என்பது வெளிப்படையாகிவிட்டது.
மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இப்பிரச்சினையில் காட்டிய ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
மாநில அரசும், மத்திய அரசும் வேறு பிரச்சினைகளை இதில் இணைத்துக் குழப்பிக் கொள்ளாமல் பேரறிவாளனை விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்!


