விவசாயிகள் போராட்டத்துக்கு நடிகர்சங்கம் முழு ஆதரவு தரும் – நாசர் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 31.03.2017 அன்று காலை 9.50 மணியளவில் சிறப்புப் பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர். பொருளாளர் கார்த்தி இராஜஸ்தானிலிருந்து அலைபேசி மூலமாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலர் கமலஹாசன்,ரஜினிகாந்த் ஆகியோர் அடிக்கல் நாட்டி கட்டிடத்தின் பலகையைத் திறந்து வைத்தனர்.

கமலஹாசன் பேசுகையில், இந்தக் கட்டிடம் நல்ல முறையில் கட்டி முடித்து குறித்த தேதியில் திறக்கப்பட தனது வாழ்த்துக்களையும், ஆசியையும் நாசருக்கும், விஷாலுக்கும் மற்றும் கட்டிட குழுவிற்கும் தெரிவித்தார். மேலும், இக்குழுவினர் திறம்பட செயல்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் அனைவருக்கும் தெரிவித்தார்.

இருவரும் தங்களது திருக்கரங்களால் செங்கலை எடுத்து வைத்து வாழ்த்தினர்.

பொதுச்செயலாளர் விஷால் பேசுகையில், இக்கட்டிடத்தைக் கட்டி முடிப்பதே தனது கனவென்றும், அதன்பின் தான் தனக்கு திருமணம் என்றும் சபதம் எடுத்தார்.

தலைவர் நாசர் பேசும்பொழுது, எல்லோருடைய ஆசியோடு இக்கட்டிடப் பணியைச் சிறப்பாக முடிப்போம் என்று உறுதி அளித்தார். மேலும், இம்மாதம் நடக்கவிருக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு என்று கூறினார்.

துணைத் தலைவர் கருணாஸ், இக்கட்டிடத்தின் மூலமாக வரும் நிதி நலிந்த கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும், உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய குழந்தைகள், மருத்துவச் செலவுகள், கல்விச் செலவு உட்பட அனைத்து செலவுகளும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே செலவழிக்கப்படும் என்று கூறினார்.

இக்கட்டிடத்தின் பணிக்காக விஷாலும், கார்த்தியும் சேர்ந்து 10 கோடி தங்கள் சொந்தப் பணத்தில் நிதி உதவி அளிப்பதாக தெரிவித்தனர்.

இக்கட்டிடம் செப்டம்பர் 2௦18 – ஆம் ஆண்டு முழுமையாக முடிவடையும் என்று கூறினர்.

Leave a Response