தன்னார்வ அமைப்புகள் என்று கூறப்படும் விதைக் குழுமம், தூயநீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், சுற்றுச்சூழல் அமையம் ஆகிய அமைப்புகளால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து, 8 பேர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
வடக்கு மாகாணசபையிடம், கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்றிரவு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.
எனினும், அதனை நிராகரித்த போராட்டக்காரர்கள், முதலமைச்சரை அவமரியாதைக்குள்ளாக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர் திரும்பிச் சென்றிருந்தார்.
இந்தநிலையில், வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவும், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனும், போராட்டக்காரர்களை சந்தித்தனர்.
இதன் போது, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, தமக்கு ஒரு வார கால அவகாசம் தருமாறு ஆளுனர் தரப்பில் கோரப்பட்டது.
அந்த வாய்மூல உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட போராட்டக்காரர்கள், தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வுகளால்,
வடக்கு மாகாணசபையின் அதிகாரங்களை மத்திய அரசின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கான- வடக்கு மாகாணசபையை நசுக்குவதற்கான புதிய சதித் திட்டத்துக்கு தூயநீரூக்கான போராட்டம், பயன்படுத்தப்பட்டு விட்டதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
முதல்வர் நேரில் வந்தபோது அவமானப்படுத்தி அனுப்பியவர்கள்,வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவின் தலையீட்டினால் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளனர். இதனால்.இந்தப் போராட்டம் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில். யாழ்.குடாநாட்டில் எழுந்துள்ள குடிநீர்ப் பிரச்சினையில் அரசியலைப் புகுத்த வேண்டாம் என்று கோரி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில்,
குடாநாட்டின் சில பிரதேசங்களில் நிலத்தடிநீர் மாசடைந்திருப்பது தொடர்பில் பொதுமக்களின் கரிசனைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல்வேறு தரப்பினரும் முயன்று வருவதுடன் இது தொடர்பில் வடமாகாண சபை அசமந்தப் போக்கில் உள்ளது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முனைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அவர்களுடைய நடவடிக்கைகள் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதை நோக்கிச் செல்லாது பிரச்சினைக்கான குற்றச்சாட்டினை எம் மீது முன்வைப்பதனை மையமாகக் கொண்டு நகர்ந்து செல்கின்றது.
இவ்வாறான செய்கைகள் குடிநீர்ப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைப் பெற்றுத்தரப் பயன்படப் போவதில்லை என்பதுடன் பொதுமக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகின்ற ஒரு முயற்சியாகவே அமைந்துள்ளன.
குடிநீர்ப் பிரச்சினை பற்றி பிரஸ்தாபிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறுமனே ஊகங்களின் அடிப்படையில் பிரச்சினையைப் பெரிதுபடுத்தி கருத்துக்களை வெளியிடுவதிலும் அதன்மூலம் மக்களை பதட்டமடையச் செய்யும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறார்களே தவிர யாழ் குடாநாட்டின் குடிநீர்ப் பிரச்சினையை எவ்வாறு அணுகலாம் அதற்கான நிரந்தர தீர்வினைக் காண்பதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி ஆக்கபூர்வமான கருத்துக்கள் எதனையும் இதுவரை முன்வைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு பிரச்சினையை பெரிதுபடுத்துவது இலகு. ஆனால் அதன் மூலம் பொதுமக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.
இப் பிரச்சினையில் உண்மையான அக்கறை கொண்டுள்ள சூழலியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள் பொதுமக்கள் மற்றும் அமைப்புக்கள் இப்பிரச்சினை தொடர்பில் தமது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைப்பதே பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் என நான் கருதுகின்றேன்.
அதுவரை பொறுமை காத்து குடாநாட்டின் குடிநீர்ப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வினை நோக்கி முன்நகர வடமாகாண சபையுடன் கைகோர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.
———————————————————–
முதலில் நடந்தவற்றையும் முதல்வரின் அறிக்கையையும் பார்க்கும்போது. பல்ம்பெற்று வருகிற தமிழர்களின் அரசியல் தலைமைகளைப் பலவீனப்படுத்தும் சிங்களர்களின் சதி என்றே தெரிகிறது. சிங்களர்களின் இந்தச்சதிக்கு ஆளாகாமல் தமிழ்மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டுமென தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கிறார்களாம்.


