
நடிகர் விஷால் தற்போது ஒரே சமயத்தில் மித்ரன் இயக்கத்தில் ‘இரும்புத்திரை’ படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக் கோழி-2’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் ‘இரும்புத்திரை’ படத்தில் விஷாலுடன் சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் 75 சதவிகிதம் முடிந்த நிலையில் ‘சண்டக்கோழி’ இரண்டாம் பாகத்தில் நடிக்கத் தொடங்கினார் விஷால்.
கடந்த சில வாரங்களாக சென்னை பின்னி மில்லில் மதுரை வீதிகளின் செட்போட்டு படமாக்கி வந்தார்கள், முதல்கட்ட படப்பிடிப்பிடிப்பு இன்னும் நான்கு நாட்கள் பாக்கி இருந்த நிலையில் கடும் மழை பெய்ய ஆரம்பித்து விட்டதால் அதில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.
இன்னொரு பக்கம் ‘இரும்புத்திரை’ படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார் விஷால். இதனால் ‘சண்டக்கோழி’ படப்பிடிப்பை சிறிது நாட்கள் தள்ளி வைத்து விட்டு ‘இரும்புத்திரை’ படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறார் விஷால். மழையையும் பொருட்படுத்தாமல் சென்னையின் முக்கிய இடங்களில் ‘இரும்புத்திரை’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.


