
அரசியல் ரீதியாக தவறான படங்கள் கொண்டாடப்படும்போது பாரதிதாசன் வரிகளால் என் மனம் கொலைவாளினை எடுக்க உந்தப்படுவது இயல்பு.
ராம் நெருங்கிய நண்பராக இருந்தபோதும் அந்தப்படம் அவரது அரசியலுக்கு எதிரான தவறான அரசியலைப் டேசும்போது அதை சங்கறுக்க வேண்டியதும் திரு வேறு தெள்ளியராதல் வேறு என்பதும் என்னை எழுதத் தூண்டுகிறது.
தரமணி பேசும்அரசியல் எல்லாமே படு மோசமான விளைவுகளையே உண்டாக்கக்கூடியது இது போன்ற டிஜிட்டல் குப்பைகளை கொண்டாடுவது தமிழ் சினிமாவுக்கும் பெண்ணியத்துக்கும் பெருமிழுக்கு.
இது போன்ற அறிவுஜீவி குப்பைகளை எதிர்க்க வேண்டியது சினிமாலை நேசிப்பவர்களின் தார்மீகக்கடமை.என்னதான் ராம் நல்ல அரசியலைப் பேச முன்வந்தாலும் இறுதியில் அவரது கருத்துக்கு எதிரான அரசியலுக்கே அவரது படங்கள் வலுச் சேர்க்கின்றன.
கற்றது தமிழில் தமிழ் படித்தால் ஓருவன் பைத்தியமாகத்தான் போகவேண்டும் என அவர் உருவாக்கிய கருத்துக்கள் தான் இன்று நீட் தேர்வு வரை வந்து சமூகத்தைப் பின்னுக்கிழுத்து வர உதவியுள்ளன.
அது போலத்தான் தரமணியும் இன்று விவசாயிகளின் அவல நிலைக்குக் காரணமான பன்னாட்டு நிறுவனங்களின்அசுரவளர்ச்சிக்கு எதிராக அனைவரும் உயிர் கொடுத்துப் போராட வேண்டிற சூழலில் ஐடிக்களால் உண்டாகும் குடும்ப சிதைவுகளை அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு அதை முழுமையாய் ஏற்க நம்மை வற்புறுத்துகிறது இந்தப்படம்.
உண்மையில் இந்தப்படம் பார்த்து நமக்கு ஜடிக்கள் கோபம் வந்தால் பரவாயில்லை ஆனால் படம் நம்மைப் பெரும் அட்ஜஸ்ட்மண்டுக்குதான் தயாராக்குகிறது.இதற்காக சப்பைக்கட்டுக்கு போலி பெண்ணியம் வேறு.
மேலும் ஒருவன் மூணுலட்சம் திருடி கொலை செய்துவிட்டு பணம் வந்தவுடன் திருப்பிக்கொடுத்து கழிவிரக்கம் கோரலாம் என்ற தவறான கருத்து வேறு.
நாயகனும் நாயகியும் செல்போனில் படமெடுத்து ப்ளாக்மெயில் செய்வதும் அனானிமஸ் அழைப்புகளில் நாயகன் பல பெண்களின் வாழ்க்கையில் ஊடுருவி சிதைப்பது அனைத்துமே குற்றமே இல்லாமல் படைப்பாளன் அவனை இறுதியில் புறாவாக பறக்கவைப்பது காலக்கொடுமை.
இது போன்ற பிற்போக்கான படங்களைக் கொண்டாடும் அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்தால் விஜய் அஜித் படங்களால் நாட்டுக்கு நன்மையே உருவாகிறது என்ற எண்ணத்துக்குத்தான் வரமுடிகிறது.
– அஜயன்பாலா


