பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதிஷ்குமார் முதலமைச்சராக உள்ளார். இங்கு இந்த வருடம் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,நிதீஷ்குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் இந்தியா கூட்டணிக்கு திரும்ப உள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன.
இதற்குக் காரணம், மகாராஷ்டிரா தேர்தல் முடிந்த பிறகு முதலமைச்சர் பதவியை சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவுக்கு விட்டுக்கொடுக்காமல், பா.ஜ.கவின் பட்நவிஸ் எடுத்துக்கொண்டதைப் போல் பீகாரிலும் முதலமைச்சர் பதவி நிதிஷ்குமாருக்குக் கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், நிதிஷ்குமார் மீண்டும் இந்தியா கூட்டணிக்குச் செல்ல வாய்ப்பு உள்ளதாகத் தகவல் பரவியது. இதையடுத்து நிதிஷ் தலைமையில் தான் பீகாரில் தேர்தலைச் சந்திப்போம் என்று பா.ஜ.க கூறியது.
இந்தச் சூழ்நிலையில், ‘நிதிஷ்குமாருக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன. அவர் தனது கதவுகளைத் திறக்க வேண்டும். இது இரு தரப்பிலிருந்தும் நட்பு நடமாட்டத்தை எளிதாக்கும்’ என்று லாலுபிரசாத் யாதவ் கூறியிருந்தார்.
பீகார் புதிய ஆளுநராக ஆரிப் முகமது கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நிதிஷ்குமாரிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிதிஷ்,’ நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’ என்று பதில் கேள்வி எழுப்பினார். உடனே கூட்டணி அரசு பதவிக்காலத்தை முடிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. உடனே ஆளுநர் குறுக்கிட்டு,’ எனது பதவியேற்பு விழாவில் இது மாதிரியான கேள்விக்கான சந்தர்ப்பம் இல்லை.இன்று மகிழ்ச்சியான நாள். நல்ல விசயங்கள் பற்றி மட்டும் பேசுவோம்’ என்றார்.
ஒன்றிய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், லாலுவுக்கு நெருக்கமான ராஜீவ் ரஞ்சன்சிங் லாலனிடம் இதுபற்றிக் கேட்ட போது,’பா.ஜ,க கூட்டணி வலுவாக உள்ளது. இருப்பினும் இது ஒரு சுதந்திர சமுதாயம். எனவே யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். லாலு தனது சொந்தக் கட்சியைப்பற்றி அதிகம் பேச வேண்டும்’ என்றார்.
இதுபற்றி லாலு மகன் தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,’ புத்தாண்டில் நிதிஷ் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசு கவிழும் என்ற எனது நிலைப்பாட்டை நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன்.உங்களைப் போன்றவர்கள்(செய்தியாளர்கள்) அவரிடம்(நிதிஷ்) தொடர்ந்து இதே கேள்வியைக் கேட்டால், அவர் என்ன செய்வார்? அவர் என்ன சொன்னாலும், பத்திரிகையாளர்களான உங்கள் ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பதில் அளித்து இருப்பார்’ என்றார்.
இந்நிகழ்வுகளால்,நிதிஷ்குமார் மீண்டும் அணி மாறப் போகிறார் என்கிற கருத்து வலுப்பெற்றிருக்கிறது.இதனால், பீகார் அரசியலில் மீண்டும் குழப்பம் உருவாகி உள்ளது.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தனியாக 240 தொகுதிகளில் மட்டுமே வென்றது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் வேண்டும். தற்போது நிதிஷ்குமாரின் 12 உறுப்பினர்கள், சந்திரபாபுநாயுடுவின் 16 உறுப்பினர்கள் உதவியுடன் கூட்டணி ஆட்சி நடத்துகிறார் மோடி.
இந்தியா கூட்டணி பக்கம் நிதிஷ் குமார் சாய்ந்து விட்டால்,பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதோடு இப்போதைய மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சிக்கும் ஆபத்து ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் பீகார் மற்றும் தில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.