காமராசர் ஆட்சியில், தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த ஈகி சங்கரலிங்கனார்

1953ஆம் ஆண்டு ‘விசாலா ஆந்திரா’ கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர் பொட்டி சிறிராமுலு. அது போலவே சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரியும், மொழிவழித் தமிழ் மாகாணம் கோரியும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்தவர் ஈகி சங்கரலிங்கனார் ஆவார்.

1955ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் மொழிவாரியாக பிரிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக எழுந்தது. அதனோடு இணைந்து சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் கோரிக்கையும் அப்போதே எழுந்தது.

29.11.1955இல் தமிழரசு கழகக் செயற்குழு கூட்டத்தில் முதன் முதலில் ம.பொ.சிவஞானம் அவர்களால் “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கின்றது, மத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பே தமிழ்நாடு பெயர் மாற்றம் குறித்து 1953இல் ம.பொ.சி சட்டமன்ற மேலவையில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு 19.1.1956இல் ஜி.உமாபதி இல்லத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தேவிகுளம் பீர்மேடு தாலுக்காக்களை கோரியும், தட்சிணா ராஜ்ஜியத் திட்டத்தை எதிர்த்தும், சென்னை ராஜ்ஜியத்திற்கு தமிழ்நாடு பெயரிடக் கோரியும் 20.2.1956இல் முழு கடை யடைப்பு நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ம.பொ.சி. அண்ணாதுரை, பாரதிதாசன், கா.அப்பாத்துரையார், சீவானந்தம், சி.பா.ஆதித்தனார் ஆகியோர் பங்கேற்றனர். அதன்படி பிப்.20ஆம் நாளன்று தமிழகமெங்கும் கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தேறியது.

28.3.1956இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மாநில புனரமைப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. அம்மசோதா விவாதத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப.சீவானந்தம் பங்கேற்று தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையின் தேவையை வலியுறுத்திப் பேசினார். அன்றைய காமராசர் தலைமையிலான காங்கிரசு அரசோ சென்னை என்றால் தான் வெளியுலகத்திற்கு தெரியும் என்று கூறி பெயர் மாற்றக் கோரிக்கையைப் புறக்கணித்தது.

இந்நிலையிலே தான் சங்கரலிங்கனார் 27.7.1956 அன்று விருது நகரில் ஓலைக்குடிசையில் பேராயக்கட்சி கொடி பறந்திட உண்ணாநிலையைத் தொடங்கினார்.

அவர் நடத்திய உண்ணாநிலைப் போரை பச்சைத் தமிழன் காமராசரின் ஆட்சி அலட்சியப்படுத்தியது. பிரதமர் நேருவோடு பேசி சங்கரலிங்கனாரின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய காமராசர் செய்தியாளர்களிடம், “இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை. இது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற சமாச்சாரம். அவர் முன் வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையது” என்று நழுவலாகப் பதிலளித்தார்.

அவரின் உண்ணாநிலைப் போரை நிறுத்தும் படி ம.பொ.சி, அண்ணாதுரை, சீவானந்தம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். அண்ணா அவர்கள் சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்தார். அப்போது, “எல்லையை வாங்க முடியாதா? இதில் என்ன கஷ்டம்? இதய சுத்தியோடு ஆந்திரா சர்க்காருடன் பேசினால் காரியம் நடக்காதா? என்று கண்ணீர் சிந்தியபடி கேட்டதாக அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவரின்
உண்ணாநிலைப் போர் 60 நாட்களைத் தாண்டியும் காமராசரின் கல்மனம் கரையவில்லை. அப்போது ஜனசக்தி துணையாசிரியர் தியாகி ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் எழுதினார். அதில், “காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது. காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ விருப்பமில்லை” என்று மனம் வெதும்பி எழுதியிருந்தார். அவரின் போராட்டத்திற்கு ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சி முழுமையாகத் துணை நின்றது.

நான் இறந்த பிறகு அக்கட்சியினரிடமே உடலை ஒப்படைக்கும் படி சங்கரலிங்கனார் இறுதியாக வேண்டிக் கொண்டார். அவர் உயிருக்குப் போராடிய நிலையில் மதுரை எர்ஸ்கின் (அரசு இராசாசி மருத்துவனை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கும் உண்ணாநிலையை தொடர்ந்தார். நாடி நரம்புகள் ஒடுங்கின. 79வது நாளில் அவர் உயிர் பிரிந்தது.

1952இல் பொட்டி சிறிராமுலுவின் மரணம் தெலுங்கர்களை விழிக்க வைத்து ஆந்திரா பெயரில் தனி மாகாணம் கண்டது. ஆனால் சங்கரலிங்கனாரின் மரணமோ காங்கிரசின் துரோகத்தாலும் திராவிட கட்சிகளின் ‘திராவிட நாடு’ குழப்பத்தாலும் தமிழர்களை தூங்க வைத்தது.

1956இல் ஹைதரபாத் இதர பகுதிகள் ஆந்திராவானது. திருவிதாங்கூர் இதர பகுதிகள் கேரளவானது. சென்னை மாகாணமோ இதர பகுதிகளோ தமிழ்நாடாக மாற வில்லை. சரியாக 11 ஆண்டுகள் கழித்து அண்ணா முதல்வரான பிறகே சென்னை மாகாணம் தமிழ்நாடானது.

தமிழர்கள் தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டும் முன்னே தெலுங்கர்கள் தம் நிலத்திற்கு பெயர் சூட்டிய கையோடு சும்மா நிற்க வில்லை. அதற்காகவே உழைத்து மடிந்த பொட்டி சிறிராமுலுவை போற்றிடவும் முன் வந்தனர். ஆந்திர அரசு ஹைதரபாத்தில் ‘பொட்டி சிறிராமுலு தெலுங்கு கழகம்’ நிறுவியும், அவர் நினைவாக நெல்லூர் மாவட்டத்தை ‘பொட்டி சிறிராமுலு’ மாவட்டம் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளது. மத்திய அரசு பொட்டி சிறிராமுலுவிற்கு அஞ்சல் தலையையே வெளியிட்டு விட்டது.

இதை விடப் பெரிய கொடுமை என்னவெனில், “சென்னை இல்லாத ஆந்திரம் தலையில்லாத முண்டம்” என்று பேசிய பொட்டி சிறிராமுலுவிற்கு சென்னையிலேயே நினைவுச் சின்னத்தை எழுப்பியும் விட்டனர். பொட்டி சிறிராமுலுவின் ஈகத்திற்கு எந்த விதத்திலும் சங்ரலிங்கனாரின் ஈகம் குறைந்ததல்ல. ஆனால் அவரை தமிழர்களாகிய நாம் என்றாவது கொண்டாடி இருக்கிறோமா? இல்லையே?

அவர் மறைந்து 57 ஆண்டுகள் கழித்து விருது நகரில் அண்மையில் தான் அதுவும் ஒப்புக்காக காணொளி மூலம் செயலலிதா அரசு நினைவுச் சின்னம் திறந்துள்ளது.

சங்கரலிங்கனார்
தமிழ்நாடு பெயர் சூட்டவும், தமிழ்மண் மீட்கவும் போராடிய சங்கரலிங்கனாரை தமிழர்களாகிய நம்மைத் தவிர வேறு யாராலும் நினைக்க முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் பாடமாகும்!

Leave a Response