12 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளிகள்), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளிகள்), டெல்லி கேப்பிட்டல்ஸ் (18 புள்ளிகள்), ஐதராபாத் சன் ரைசர்ஸ் (12 புள்ளிகள்) ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் அரங்கத்தில் நேற்று (மே 7) இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
‘டாஸ்’ வென்ற சென்னை அணித் தலைவர் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரை வீசிய மலிங்கா அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 2 ஆவது ஓவரில் பவுண்டரி விளாசிய பாப் டுபிளிஸ்சிஸ் (6 ரன்) அடுத்த ஓவரில் ராகுல் சாஹர் பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (5 ரன்) ஜெயந்த் யாதவ் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஒரு ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் (10 ரன்) குருணல் பாண்ட்யா பந்து வீச்சில் ஜெயந்த் யாதவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார்.
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்ததால் சுழற்பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) சென்னை அணி 32 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதைத்தொடர்ந்து அம்பத்தி ராயுடு, எம்.விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் தவறான பந்துகளை தண்டிக்கும் விதத்தில் அடித்தும் ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 12.1 ஓவர்களில் 65 ரன்னை எட்டிய போது எம்.விஜய் (26 ரன்கள், 26 பந்து, 3 பவுண்டரி) ராகுல் சாஹர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.
அடுத்து, அம்பத்தி ராயுடுவுடன் தோனி இணைந்தார். ஜெயந்த் யாதவ் வீசிய ஒரு ஓவரில் தோனி, அம்பத்தி ராயுடு தலா ஒரு சிக்சர் தூக்கினர். 17.1 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்னை எட்டியது. மலிங்கா வீசிய ஒரு ஓவரில் தோனி அடுத்தடுத்து 2 சிக்சர்கள் அடித்தார். கடைசி ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் தோனி, இஷான் கிஷனிடம் கேட்ச் ஆனதும் நடுவர் அவுட் என்று அறிவித்தார். ஆனால் டெலிவிஷன் ரீப்ளேயில் அது நோ-பால் என்று தெரியவந்ததால் தோனி தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நடப்பு சாம்பியன் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அம்பத்தி ராயுடு 37 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்னும், தோனி 29 பந்துகளில் 3 சிக்சருடன் 37 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மும்பை அணி தரப்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், குருணல் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (4 ரன்) தீபக் சாஹர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையிலும், குயின்டான் டி காக் (8 ரன்) ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் பாப் டுபிளிஸ்சிடம் கேட்ச் கொடுத்தும் அவுட் ஆனார்கள்.
அடுத்து இஷான் கிஷன், சூர்யகுமாருடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 13.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை எட்டியது. இஷான் கிஷன் 31 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் கண்ட குருணல் பாண்ட்யா (0) இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமாருடன் இணைந்தார். இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 18.3 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 5 ஆவது முறையாக முன்னேறியது.
சூர்யகுமார் யாதவ் 54 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 71 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 11 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 13 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
சென்னையிலேயே சென்னை அணி படுதோல்வி அடைந்தது ரசிகர்களைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.