கடலூர்,செப்.16 (டி.என்.எஸ்) தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடக்கிறது என்றும், ஓ.பன்னீர்செல்வம் பொம்மை முதல்வராக இருக்கிறார் என்றும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிஞ்சியப்பாடியில் நடைபெற்ற கடலூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த 27–ந் தேதி முதல் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சிகரமான மாற்றமாக அமைந்து இருக்கிறது.
இந்த மாற்றம் நிகழ்ந்த நேரத்தில் நாங்கள் பொறுமை காத்தோம். ஏனெனில் இந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நீதிக்கு தலைவணங்க வேண்டும் என்று ஏற்கனவே எங்களுக்கு தி.மு.க. தலைவர் கட்டளை இட்டு இருந்தார். அதனால் நாங்கள் பொறுமை காத்தோம். ஆனால் சில பத்திரிகைகள் கலைஞர் அமைதியாக இருக்கிறார் என்று எழுதியது.
கடந்த 27–ந் தேதி முதல் சட்டமன்ற செயலாளரின் போக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கிறோம். அவரது பணி என்ன தெரியுமா? ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவி போய் விட்டால், அந்த தொகுதி காலியாக இருக்கிறது என்று அறிவிக்க வேண்டும்.
ஆனால் கடந்த 27–ந் தேதி முதல் தற்போது வரை அந்த தொகுதி காலியாக இருக்கிறது என்பதை அவர் அறிவிக்கவில்லை. தீர்ப்பு வந்ததற்கு மறுநாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக தேர்வு செய்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. ஆனால் இன்னும் ஓ.பன்னீர்செல்வம் அறையில் நிதி அமைச்சர் என்ற பெயர்ப்பலகை தான் இருக்கிறது. அதை கழற்ற வேண்டிய பொறுப்பு சட்டமன்ற செயலாளருக்கு உள்ளது. ஆனால் அதை அவர் செய்யவில்லை.
நேற்று முன்தினம் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் என்று அறிவித்து இருக்கிறார். அப்போது, ஒரு நிருபர் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக சட்டமன்ற செயலாளரிடம் இருந்து உங்களுக்கு கடிதம் வந்ததா? என்று கேட்டதற்கு, அவர் இன்னும் தகவல் வரவில்லை என்று சொல்கிறார். இப்படி தமிழகத்தில் ஒரு பொம்மை ஆட்சி நடக்கிறது. பொம்மை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். 2016–ம் ஆண்டு தமிழகத்தில் கலைஞர் தலைமையில் ஆட்சி அமையும் என்று சபதம் ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.


