
தருமபுரியில் நடந்த தொழிற்சங்க இணைப்பு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன்.அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து தொடங்கவேண்டும்.கோம்பேரி கோம்பை வழியாக பொம்மிடி செல்வதற்கான சாலையை விரைந்து அமைக்கவேண்டும்.காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில்
கர்நாடகா புதியஅணையைக் கட்டினால் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் கிடைக்காது.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து,வரும் 13 ஆம் தேதி கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
தமிழர்களும்,கன்னடர்களும் சகோதரர்களாக உள்ளனர்.தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை கர்நாடகா அரசு திறக்கவேண்டும்.
போதைப் பழக்கம் மற்றும் பாலியல் துன்புறுத்தல்,வன்கொடுமைக்கு எதிராக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.தமிழக மக்கள் இதற்கு ஆதரவு தரவேண்டும்.
மத்திய அரசின் கொள்கைகளால் பல தொழில்கள் நெருக்கடிக்கு உள்ளாகி தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ள
நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் காக்க இந்தியா முழுவதிலும் ஆகஸ்ட் 6 முதல் 15 நாட்களுக்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசியக்கொடியை ஏந்தியபடி நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கும் தமிழக மக்கள் ஆதரவு அளிக்கவேண்டும்.
ஈரான் மீது மீண்டும் போர் தொடுக்கப்பட்டு வருகிறது.வளைகுடா நாடுகளில் மலையாளம் பேசும் மக்கள் பலர் வசித்து வருகின்றனர்.அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு வேண்டும்.ஈரான் மீது போர் தொடுக்கும் அமெரிக்காவை எதிர்த்து பிரதமர் மோடி குரல் கொடுக்கவேண்டும்.கரூர் சம்பவம் குறித்து முதல்வர் சட்டப்பேரவையில்
பேசியிருக்க வேண்டும்.
வாக்கு மை காயும் முன்பாக மக்கள் பிரதிநிதிகள் கட்சி தாவுவது ஜனநாயகத்தின் மீதான நெருக்கடி ஆகும்.தமிழக முதல்வர் புதியவர்.அவரிடம் இருந்து இன்னும் அதிகமான திட்டங்கள்,கொள்கைகளை நாடு எதிர்பார்க்கிறது. ஜனநாயகத்துக்கு பொருந்தாத உடல்மொழிகளை முதல்வர் விஜய் தவிர்க்கவேண்டும்.
தேர்தலில் கட்சிகளின் வெற்றி,தோல்விகள் இயல்பானவை.ஆனால்,மதவாத சக்திகளை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.
கரூர் நிகழ்ச்சியில்,இலஞ்சம் கூடாது என முதல்வர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.பலரின் உழைப்பை சிலர் சுரண்டுவது நல்லதல்ல.ஆனால்,40 ஆண்டுகால குறைகளைச் சரிசெய்ய சற்று அவகாசம் தேவைப்படும்.கடந்த ஆட்சிக் காலத்தில்,இந்தியாவிலேயே சமூகநலத் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது.
கடந்த ஆட்சிகாலத் திட்டங்கள் விருப்பு,வெறுப்பின்றி தொடரவேண்டும்.தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த
வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


