
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் மாதம் 25 ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதைத் தவிர்க்கும் பொருட்டு சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டாம் என மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவி்ட்டது.
அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், காய்கறிகள், உணவுப்பொருட்கள் ஏற்றி்ச்செல்லும் லாரிகள், டிரக்குகள் மட்டும் சென்றுவருகின்றன. முதல் கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதி முடிந்த பின் 15 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்க ஏற்பாடுகள் நடந்த போது, வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் வரும் 20 ஆம் தேதி சில தொழில்களுக்கு விதவிலக்கு அறிவித்தும், விதிமுறைகளைத் தளர்வு செய்தும் மத்திய அரசு அறிவித்தது. அப்போது சரக்குலாரிப் போக்குவரத்து வழக்கம் போல் தொடரலாம் என மத்திய அரசு தனது வழிகாட்டி நெறிமுறையில் தெரிவித்திருந்தது.
இந்தச் சூழலில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்ட அறிவி்ப்பில், “மாநிலங்களுக்கு இடையே,மாநிலங்களுக்குள் செல்லும் வாகனங்களுக்கு உள்துறை அமைச்சகம் விதிமுறைகளைத் தளர்த்தி சுங்கக்கட்டணத்திலிருந்து விலக்கு அளித்திருந்தது. வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு மத்தியஅரசு அனுமதியளித்துள்ளது. ஆதலால், வரும் 20 ஆம் தேதி முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியஅரசின் இந்த முடிவுக்கு அனைத்து இந்திய மோட்டார் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் குல்தாரன் சிங் வெளியிட்ட அறிக்கையில்…
ஒரு புறம் மத்திய அரசு அத்தியாவசிப் பொருட்களைக் கொண்டு செல்லக் கோருகிறது, எங்களுக்கு ஏற்படும் இலாபம், நஷ்டத்தைப் பாராமல் தேசத்துக்காகச் செய்துவருகிறோம். லாரி,டிரக் உரிமையாளர்களிடம் இதற்குமேல் சமாளிப்பதற்குப் போதுமான நிதிவசதி இல்லை.
எங்கள் போக்குவரத்துத் துறையைக் கைகொடுத்து தூக்கிவிடுவதற்கு மத்திய அரசு சிறப்பு நிதியை அறிவிக்க வேண்டும். லாரி, டிரக் இயக்கினால் செயல்பாட்டுக்கட்டணத்தில் 20 சதவீதம் சுங்கக்கட்டணம் வந்துவிடும்.ஆதலால் மத்திய அரசு சுங்கக்கட்டணத்தை வசூலிக்கக் கூடாது
எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்குப் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில்
இதற்காக மத்திய அரசைத் திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.


