
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து இலேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பொதுவாக வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை எப்போதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். அதேநேரம் மழை காரணமாக வழக்கத்தை விட இரண்டு மடங்கு கூடுதலாக சென்னையின் புறநகர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நேற்று ஏற்பட்டது.
சென்னையின் வளர்ச்சிப் பணிகளின் ஒன்றான மெட்ரோ மற்றும் மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் பணிகளால் சாலைகள் சுருங்கிவிட்டன. பல சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லமுடியும் நிலை உள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்லும் சாலைகளில் மகிழுந்துகள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
குறிப்பாக, அண்ணாசாலையில் இரும்பு மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சாலையின் இருபுறங்களும் தடுப்புகள் அமைத்து பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. அதேபோல் ஈரடுக்கு மெட்ரோ ரயில் பணி காரணமாக கிண்டி முதல் பூந்தமல்லி பகுதிகளின் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, இந்தப் பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும்.மழை காரணமாக சாலையின் இருபுறங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதாலும், சாலைகளில் தண்ணீர் தேங்கி சேதமடைந்துள்ளதால் அனைத்து வாகனங்களும் நத்தைபோல் ஊர்ந்து சென்றன.
இதனால் கிண்டி, போரூர், ஐயப்பன்தாங்கல், பூந்தமல்லி வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசல் பாதிப்பால், கோயம்பேடு மற்றும் மதுரவாயல் வழியாக பூந்தமல்லி செல்லும் வாகனங்களும் எளிமையாக வரமுடியாத வகையில் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றன.
சாலை விரிவாக்கம் காரணமாக கிழக்கு கடற்கரைச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூந்தமல்லி, மதுரவாயல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளன.அதேபோல், சென்னையில் இருந்து பூந்தமல்லி மற்றும் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட் தொழிற்சாலைகளுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலைக்கும் செல்கின்றனர்.
காலை முதல் மழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் 1 முதல் 2 மணி நேரம் காலதாமதமாகச் செல்லும் நிலை ஏற்பட்டது. அதேபோல் தொழிற்சாலைகளுக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அதிகாலையில் வந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள், மழை காரணமாக மதுரவாயல் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் மழையால் போக்குவரத்து விளக்குகள் சரிவர வேலை செய்யவில்லை. இதனால் சந்திப்புகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இதுதவிர பல்லாவரம் மேம்பாலம் தற்போது இருவழிச் சாலையாக மாற்றப்பட்டதால், சென்னையில் இருந்து தாம்பரம் செல்லும் வாகனங்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கின. குரோம்பேட்டை மேம்பாலம் அருகே சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் விரைந்து செல்ல முடியாததால், அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றதால் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் சோழிங்கநல்லூர், கானத்தூர் பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வடசென்னை முழுவதும் அடிக்கடி மிதமான மழை பெய்தது. இதனால் திருவொற்றியூர், எண்ணூர் நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சரக்குகளை ஏற்றிக்கொண்டு துறைமுகத்திற்கு வந்த கனரக வாகனங்கள் அனைத்தும் மழை காரணமாக அங்காங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டதால், அப்பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் விடிய விடிய மழை பெய்து கொண்டேயிருக்கிறது. இதனால் இன்றும் அந்நிலையே தொடருகிறது.சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.கல்லூரிகள் இயங்கும் என்று சொல்லப்பட்டிருப்பதால் கல்லூரி வாகனங்கள் நடமாட்டம் குறையவில்லை.அதனால் காலையில் இருந்தே கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


