விடிய விடிய கொட்டும் மழை – தண்ணீரில் மிதக்கிறது சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்

தென்மேற்கு வங்கக் கடலில் வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருப்பதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று (நவம்பர் 21) நிருபர்களிடம் கூறியதாவது:-

வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து உள்ளது.

இதன் தொடர்ச்சியாக வருகிற 23-ந்தேதி வரை(இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும்.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாகவும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். வட தமிழகத்தில், அதாவது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு (இன்றும்) மழை தொடரும்.

காற்றின் வேகம் அதிகமாகி மேகக்கூட்டங்கள் கலைந்து சென்ற காரணத்தினால் வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இல்லை. அது தற்போது வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்து தமிழக பகுதிகளில் மெதுவாக நகரும்.

வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வட தமிழகத்தின் வழியாக உள்ளே வந்து, உள் தமிழகத்தில் கடந்து செல்ல இருக்கிறது. இதனால் தமிழகத்தில் 22-ந்தேதி (இன்று) பரவலாகவும், 23-ந்தேதி (நாளை) மிதமாகவும் மழை பெய்யும். கஜா புயல்-2 என்று வரும் தகவல் புரளி. கஜா-2, கஜா-3 என்று எதுவும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

வானிலை மையம் அறிவித்தபடி நவம்பர் 21 ஆம் தேதி இரவு, விடிய விடிய மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருக்கிறது. அதிகாலை நடைபயிற்சி முற்றிலுமாக நின்றிருக்கிறது.

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Response