பால் லாரி ஓட்டியவர் ஹெல்மெட் போடவில்லை என அபராதம் – சென்னையில் நடந்த உண்மை சம்பவம்

சென்னை பெருநகர காவல்துறை ஆணையருக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மின்னஞ்சல் வாயிலாக வேண்டுகோள்

உயர்திரு சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அவர்களுக்கு வணக்கம்.

சென்னை வேளச்சேரி மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள சங்க நிர்வாகிகளை நேற்று (04.10.2017)பிற்பகல் சுமார் 2.00மணியளவில் நேரில் சந்தித்து முடித்து விட்டு நானும் எங்களது சங்கத்தின் மாநில பொருளாளர் திரு. எஸ்.பொன்மாரியப்பன் அவர்களும் அண்ணாசாலை வழியாக அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகம் நோக்கி திரும்பி கொண்டிருந்தோம்.
நல்ல வெயிலில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்ததால் நாக்கு வறண்டு விட அண்ணாசாலை கோபாலபுரம் சந்திப்பில் உள்ள தேனீர் கடையில் தேனீர் அருந்தி விட்டு தலையெல்லாம் வியர்வையாக இருந்த காரணத்தால் தலைக்கவசத்தை வாகனத்தில் பின்னால் இருந்த மாநில பொருளாளரிடம் கொடுத்து விட்டு வாகனத்தை ஓட்டினேன்.

அண்ணா மேம்பாலம் கீழே உத்தமர் காந்தி சாலை சந்திப்பில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் எங்களையும் சேர்த்து தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டிய சுமார் ஐந்து வாகன ஓட்டிகளை நிறுத்தினார். எங்களிடம் வாகன பதிவு புத்தகம், வாகன காப்பீடு, அசல் ஓட்டுனர் உரிமம் மற்றும் தலைக்கவசம் அனைத்தும் சரியாக இருந்தும் அந்த இடத்தில் தலைக்கவசத்தை அணியாமல் வந்தமைக்காக போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. எம்.சேகர் அவர்கள் 100.00ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றார். ஆனால் மற்ற இரண்டு வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் 1500.00ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என பேரம் பேசி தலைக்கு 200.00ரூபாய் வாங்கி கொண்டு அதற்கான ரசீது வழங்காமல் வாகனத்தை விடுவித்து விட்டனர்.

நாங்கள் சற்று முன் தான் தலைக்கவசத்தை கழற்றினோம் எனக் கூறியும் அவர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் 100.00ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு அதற்கான ரசீதை பெற்றுக் கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்த பிறகு சந்தேகத்தின் பேரில் அந்த ரசீதை எடுத்து பார்த்த எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஏனெனில் அந்த ரசீதில் நாங்கள் ஓட்டி வந்தது MILK LORRY என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததோடு வாகன ஓட்டுனர் உரிமம் எண். 000000000000 என மொத்தம் 12பூஜ்யங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்ததோடு தலைக்கவசம் இல்லாததற்கு என்பதை குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி குறிப்புகள் பக்கத்தில் எந்த இடத்தில் எங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பதற்கான விவரம் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

எங்களது இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து அதற்கான அபராதத்தை செலுத்துவதற்கான ரசீதில் பால் லாரியை தலைக்கவசம் இல்லாமல் நாங்கள் ஓட்டி வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதையெல்லாம் பார்க்கும் போது மேற்கண்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. எம்.சேகர் உள்ளிட்டோர் உடனடி அபராதம் விதிப்பதில் மிகப்பெரிய அளவில் மோசடி செய்கிறார்களோ? என்கிற சந்தேகம் எங்களுக்கு எழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. எம்.சேகர் மற்றும் அவரோடு பணியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் இவரைப் போன்ற வசூல் மன்னர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் தங்களை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

மேலும் பெரும்பாலான போக்குவரத்து சிக்னல்களில் காவலர்கள் போக்குவரத்தை சரி செய்யும் பணிகளில் சரியான முறையில் செயல்படாமல் வசூல் வேட்டையில் ஈடுபடுவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். எனவே தாங்கள் மாறுவேடம் பூண்டு சென்னை மாநகரில் போக்குவரத்து காவலர்களின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இணைப்பு :- அபராதம் செலுத்திய ரசீது நகல்
அன்புடன்
சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனர் & மாநில தலைவர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.
அலைபேசி :- 9566121277 / 9600131725.
05.10.2017 / காலை 8.50மணி.

Leave a Response