
வைகாசி அனுசம் என்ற பெயரில், திருவள்ளுவரை மத, அரசியல் அடையாளங்களுக்குள் அடைத்து வைக்கும் நோக்கத்துடன் காவி நிற ஆடையணிந்த தோற்றத்தில் சித்தரித்து ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பது தமிழ்நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ஆளும்கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சருமான வன்னிஅரசு இதைக்கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவருடைய அறிக்கையில்….
தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வரிசையில் இப்போது பொறுப்பு ஆளுநராக இருக்கும் ராஜேந்திர அர்லேகர் அவர்களும் அய்யன் திருவள்ளுவருக்கு ‘காவி’ பூசி, அவரை களங்கப்படுத்தும் வேலையை மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடும், தமிழர்களும் என்றும் காவிகளையும்,அதனைத் திணிக்க முயலும் சனாதனிகளையும்
துளியும் ஏற்காது புறந்தள்ளுவார்கள் என்பதற்கு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே சாட்சியாக உள்ளன.
நமது பொறுப்பு ஆளுநர் அர்லேகர்,இங்கு திருவள்ளுவருக்கு காவி பூசுவதற்கு முன்னரே,அவர் ஆளுநராக இருக்கும் கேரள மாநிலத்தில் அரசுவிழாக்களில் ஆர்.எஸ்.எஸ்.முன்வைக்கும் ‘பாரத மாதா’ படத்தைத் தொடர்ந்து திணித்து வருகிறார்.இதனாலேயே முந்தைய இடதுசாரிஅரசின் அமைச்சர்கள்,ஆளுநரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்த நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்கு தள்ளுவது,திருவள்ளுவருக்குக் காவி பூசுவது போன்ற ஆளுநரின் தமிழர் விரோத செயல்கள் கண்டிக்கத்தக்கது.தமிழர் விரோத செயல் மட்டுமல்ல அரசமைப்புச் சட்டத்துக்கும் விரோதமானதாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இந்திய பிரதமரிடம் வலியுறுத்தியபடி, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் (ஆளுநர் அலுவலகம் உள்பட) தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதன்மை இடத்தை உறுதி செய்யவேண்டும்.ஆளுநர் அர்லேகர் தமது ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகளை நிறுத்திவிட்டு,புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்தும் பணிகளில் ஈடுபடவேண்டும்.
– வன்னி அரசு
அமைச்சர் – சமூகநீதித்துறை
தமிழ்நாடு அரசு
31.05.26
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


