வைத்திலிங்கம் மூலமாக ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி – ஏன்?

தமிழ்நாட்டில் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வீட்டு​வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்​சித்துறை அமைச்​சராக இருந்​தவர் வைத்​திலிங்​கம்.

இவர்,தற்போது ஒரத்​தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர், வீட்டு​வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்​சராக இருந்த கால கட்டமான 2013 ஆம் ஆண்டு, பிரபல தனியார் நிறு​வனம் சென்னையை அடுத்​துள்ள பெருங்​களத்​தூரில் 57.94 ஏக்கர் நிலத்​தில் 1,453 வீடுகள் கொண்ட அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பைக் கட்ட அனுமதி கோரியது.

இதற்காக அந்த நிறு​வனம் சென்னை பெருநகர வளர்ச்சி குழு​மத்​தில் விண்​ணப்​பித்து இருந்​தது. 2013 இல், இந்த நிறு​வனம் விண்​ணப்​பித்த போதி​லும் சுமார் 3 ஆண்டுகள் அத்திட்​டத்​துக்கு அனுமதி கிடைக்க​வில்லை. 2016 ஆம் ஆண்டு அத்திட்​டத்​துக்கு அனுமதி கிடைத்​தது. இந்த அனும​தியை வழங்க அப்போதைய வீட்டு​வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்​சித்துறை அமைச்சர் வைத்​தி​லிங்​கத்​துக்கு மிகப் பெரிய தொகை இலஞ்சமாக தரப்​பட்​டதாகக் குற்றச்சாட்டு எழுந்​தது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்​துறை​யின் இலஞ்ச ஒழிப்புத் துறை​யில் புகார் தெரிவிக்​கப்​பட்​டது. அதில்,
வைத்​திலிங்​கத்​தின் மகன்கள் இயக்​குநர்​களாக உள்ள நிறு​வனத்​துக்​கு கடன்போல பல்வேறு நிறு​வனங்கள் மூலம் ரூ.27.9 கோடி தரப்​பட்​ட​தாக​வும் அந்த நிறு​வனம் திடீரென கடனை திருப்பி தரமுடிய​வில்லை என்று நோட்​டீஸ் அனுப்​பி​விட்​ட​தாக​வும் கூறப்​பட்​டுள்​ளது. இந்த இலஞ்ச பணத்​தைப் பயன்​படுத்தி வைத்​திலிங்​க​மும், அவரது மகன்களும் திருச்சி பாப்​பாகுறிச்​சி​யில் ரூ.24 கோடி மதிப்புள்ள 4.5 ஏக்கர் நிலத்தை வாங்​கிய​தாகக் கூறப்​பட்டு இருந்​தது.

இந்த புகாரின் அடிப்​படை​யில் இலஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்​தி​யது. அதில்,வைத்​திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது அளிக்​கப்​பட்ட புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்து முன்​னாள் அமைச்சர் வைத்​திலிங்​கம், சம்பந்​தப்​பட்ட தனியார் நிறுவன இயக்​குநர் மற்றும்
வைத்​திலிங்​கத்​தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு உள்ளிட்ட 11 பேர் மீது இலஞ்ச ஒழிப்புத்​துறை வழக்​குப்​ப​திவு செய்​தது. குறிப்பாக 2011 – 2016 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி​யில் வருமானத்​துக்கு அதிகமாக வைத்​திலிங்கம் ரூ.33 கோடி சொத்து சேர்த்​ததாக எழுந்த புகாரின் அடிப்​படை​யில் இலஞ்ச ஒழிப்புத்​துறை இந்த வழக்கைப் பதிவு செய்திருந்​தது.

இதுஒரு​புறம் இருக்க, சட்ட விரோத பணப் பரிமாற்றம் பிரி​வின் கீழ் அமலாக்​கத்​துறை​யும் தனியாக வழக்​குப் பதிவு செய்து விசாரணை மேற்​கொண்​டது. அதுமட்டும் அல்லாமல் வைத்​திலிங்கம் தொடர்​புடைய பல்வேறு இடங்​களில் சோதனை நடத்தி பல ஆவணங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்​கொண்​டது.

இந்நிலை​யில், வைத்​திலிங்​கத்​துக்குச் சொந்​தமான ரூ.100 கோடியே 92 இலட்சம் மதிப்புள்ள 2 அசையா சொத்துகளை முடக்கி​யுள்ளதாக அமலாக்​கத்​துறை தெரி​வித்​துள்ளது. வீட்டு வச​தித்​துறை அமைச்​சராக இருந்த​போது வரு​மானத்​துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்​ததாக ப​திவான வழக்​கின் அடிப்​படை​யில் இந்த நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்ளதாக அமலாக்​கத்​துறை தெரி​வித்​துள்​ளது.

இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இப்போது, தமிழ்நாட்டில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒருங்கிணைத்து அதன்பின் அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பது எனவும் அதன்மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்துக்குள் தம் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம் என்பது பாஜக வகுத்துள்ள வியூகம்.

அதைச் செயல்படுத்த,ஈரோடு இராமலிங்கம் மூலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மூலமாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளை ஒன்றிய அரசு செய்துவருகிறது.

அதன் வெளிப்பாடுதான், அண்மையில் ஈரோடு இராமலிங்கம் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை,இப்போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை மூலம் முடக்கியிருப்பது ஆகியன என்கிறார்கள்.

இந்நிகழ்வுகள், கடும் நிபந்தனைகள் விதிக்காமல் ஒருங்கிணைய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு விடுக்கப்பட்டிருக்கும் செய்தி என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

என்ன நடக்கப்போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Response